இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு உடன்பாடு சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
அதன்பின்னர் ஐயூஎம்எல் கட்சி தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில், ”நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நாங்கள் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தோம். முதலில் நாங்கள் கடந்த முறை வென்ற ராமநாதபுரம் தொகுதியே வேண்டுமென்று கேட்டோம். அத்துடன் மாநிலங்களவைக்கு ஒரு சீட்டை ஐயூஎம்எல் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரினோம்.
அதற்கு, ’இந்த பேச்சுவார்த்தையானது நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பானது மட்டுமே. தேர்தலுக்கு பின்னர் மாநிலங்களவை சீட் குறித்து நாம் பேசுவோம்’ என்று திமுக தலைமை உறுதியளித்தது.
மேலும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் தொகுதியில் கடந்த மக்களவை தேர்தலில் வென்று 5 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றி வரும், நவாஸ் கனியே மீண்டும் அங்கு போட்டியிடுவார் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் சின்னத்தை பொறுத்தவரை இந்திய முஸ்லீக் லீக் கட்சியின் ஏணி சின்னத்திலேயே போட்டியிடும். இதனை தொகுதி பங்கீடு உடன்பாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக – கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது!
காங்கிரஸ்- ஆம் ஆத்மி: 5 மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு! இந்தியா கூட்டணியில் முன்னேற்றம்!