ஜூன் 1ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானக் கட்டணத்தின் குறைந்தபட்ச வரையறையை 16 சதவிகிதமாக உயர்த்த விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக விமானப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. எனவே நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவுவதற்காக உள்நாட்டு விமானக் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி ஜூன் 1ஆம் தேதி முதல், உள்நாட்டு விமானக் கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13 சதவிகிதத்தில் இருந்து 16 சதவிகிதமாக உயர்த்துவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, 40 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் இலக்கை அடையும் விமானங்களில் செல்ல குறைந்தபட்சக் கட்டணம் ரூ.3,300 ஆக இருக்கும். 60 முதல் 90 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட விமானங்களில் செல்ல ரூ.4,000 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.
பயண தூரத்தின் அடிப்படையில், 90-120 நிமிடங்களில் இலக்கை அடையும் விமானங்களில் பயணிக்க ரூ. 4,700, 150-180 நிமிடங்களில் இலக்கை அடையும் விமானங்களில் பயணிக்க ரூ.6,100, 180-210 நிமிடங்களில் இலக்கை அடையும் விமானங்களில் பயணிக்க ரூ.7,400 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.
