W
ஆசிரியர்களுக்கு ரூ.6 முதல் 14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சலுகை மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே இருக்கின்ற ஒன்று. அதற்கேற்றுவாறு அவ்வப்போது அறிவிப்புகளும் வருகின்றன.
இந்நிலையில், பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ ஆசிரியர்களுக்கு ரூ. 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் முக்கிய செலவான திருமணம், புதிய பைக் மற்றும் கார் வாங்க கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனுதவி திட்டத்தை ஆசிரியர்களும், கல்வித் துறை பணியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசே கடன் வழங்குவதால், அதற்கான வட்டி விகிதமும் குறைவாக இருக்கும் என்பதால், இந்த அறிவிப்பு ஆசிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “அரசு ஏற்கனவே வீடு கட்டுவதற்கு கடன் வழங்கி வருகிறது. இதனை விரிவுபடுத்தி தற்போது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்க கடன் தருவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த கடன் பெறுவதற்கான நடைமுறை கடுமையாக உள்ளது. பலர் ஒரே சமயத்தில் விண்ணப்பம் செய்வதால் சீனியாரிட்டி முறை கடைபிடிக்கப்படும். இதனால் கால தாமதம் ஏற்பட்டு உரிய நேரத்தில் கடன் கிடைக்காத சூழல் உள்ளது” என்று கூறினார்.
**-வினிதா**
�,