பிரிட்டன் நாட்டின் பிரதமராக லிஸ் ட்ரஸ் சமீபத்தில் பதவியேற்றார். பதவியேற்ற 45 நாட்களில் அவர் தனது பதவியை இன்று (அக்டோபர் 20) ராஜினாமா செய்தார்.
பிரிட்டனில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மினி பட்ஜெட்டில் பல வரிக்குறைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்த திட்டங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை கொடுக்கவில்லை. அத்துடன் நாட்டில் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது.
இதற்கு அவரது சொந்தக்கட்சி எம்.பி.க்களே அதிருப்தி தெரிவித்தனர். இதனால் தன் மீது நெருக்கடி அதிகரிப்பதை உணர்ந்த லிஸ் ட்ரஸ் இன்று திடீரென பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லேர்ரி பூனை ஒன்றின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பிரிட்டன் அமைச்சரவை அலுவலகத்திற்கு என பூனை ஒன்று உள்ளது. அதனை ”சீப் மவுசர் ”என அழைக்கின்றனர். இங்கிலாந்து பிரதமராக வருபவர் சீப் மவுசராக பூனையை நியமிக்கும் அதிகாரம் பெறுகிறார்.
சீப் மவுசராக உள்ள இந்த ”லேர்ரி” என்ற பூனைக்கென்று தனியாக ட்விட்டர் கணக்கும் செயல்பட்டு வருகிறது.
அந்த ட்விட்டர் கணக்கில் இன்று ட்ரஸ்சின் பதவி விலகலை தொடர்ந்து வெளியான செய்தியில், மன்னர் மூன்றாம் சார்லஸ், தன்னை நாட்டின் பிரதமர் பதவியை ஏற்று கொள்ளும்படி கூறியிருக்கிறார்.

ஏனெனில், இந்த முட்டாள்தனம் நீண்ட நாட்களாக நீடித்து கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்தில் பல்வேறு நெருக்கடியான தருணங்களில் எப்போதும் நகைச்சுவையான தகவல்களை வெளியிடுவது வழக்கம்.
கடந்த முறை பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து பலர் பதவி விலகினார்கள். அப்போது , லேர்ரி பூனையும் ட்விட்டரில் தனது பதவி விலகல் செய்தியை பகிர்ந்து கொண்டது.
என்னால், தொடர்ந்து நல்ல மனசாட்சியுடன் இந்த பிரதமருடன் வசிக்க முடியாது. ஒன்று அவர் போகட்டும். அல்லது நான் போகிறேன் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அமைச்சரவை அலுவலகத்தின் சீப் மவுசர் , போட்டோஷாப் செய்யப்பட்ட சிறிய மேடை முன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தது. அதற்கு அடுத்த நாள் இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
