மதுபான கொள்முதல்: டாஸ்மாக்கிற்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்

Published On:

| By Prakash

மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன், ’டாஸ்மாக் விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட செலவுகள், மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எந்த விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன’ உள்ளிட்ட விவரங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்தார்.

ADVERTISEMENT

இதில் மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகம் வழங்கியிருந்தது.

அதேநேரத்தில், மூன்றாம் நபருடைய வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்பதால் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எந்த விலைக்கு மதுபானம் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது தொடர்பான விவரங்களை வெளியிட மறுப்பு தெரிவித்தது.

ADVERTISEMENT

இதை எதிர்த்து வழக்கறிஞர் லோகநாதன் மீண்டும் 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுபான கொள்முதல் தொடர்பான விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்பதற்கான காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்றும், மதுபான கொள்முதல் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பான விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் அமர்வு முன்பு, இன்று (டிசம்பர் 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விவரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு 10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, அந்த தொகையை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ’மது உற்பத்தி நிறுவனங்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் நகல்களையும் சீல் வைக்கப்பட்ட கவரில் ஜனவரி 6ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

ஜெ.பிரகாஷ்

இந்தியாவுக்கு ஆதார்: தமிழகத்துக்கு ’மக்கள் ஐடி’!

தப்பித்த பாபர் அசாம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share