செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை (ஏப்ரல் 24) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். மேலும் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த ‘எண்ணி 7 நாள்’ என்ற படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க இருந்தது.
இதற்காக பி.வி.பி கேபிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமியும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோசும் கடன்பெற்றனர்.
அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த லிங்குசாமி – சந்திர போஸ் பங்குதாரர்களாக உள்ள திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு மூலம் காசோலை கொடுத்ததாகவும்,
அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்ததாகவும் கூறி பி.வி.பி. கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு கோர்ட்டு 6 மாதம் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22 அன்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.
மேலும் பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து பெற்ற கடனை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
அந்த உத்தரவை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்காமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கு வழங்கிய தண்டனையை உறுதி செய்து லிங்குசாமியின் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 12 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
இந்த பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று அப்போது இயக்குநர் லிங்குசாமி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இராமானுஜம்