இனி இடியாப்பம் விற்பதற்கும் உரிமம் அவசியம் என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.
தமிழகத்தின் காலை, மாலை உணவுப் பட்டியலில் நீங்கா இடம்பிடித்திருக்கும் சுவையான உணவு இடியாப்பம்.
காலையிலும், மாலையிலும் சைக்கிள்களிலும், இரு சக்கர வாகனத்திலும் வியாபாரிகள் இடியாப்பத்தை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். சென்னை போன்ற நகரங்கள் முதல் கிராமங்களில் உள்ள தெருக்கள் வரை இடியாப்பம் விற்பனை செய்யப்படுகிறது.
இதை வாங்குவதற்கு வீட்டில் இருந்து வெளியே வருவதற்கும் இடியாப்ப வியாபாரி மின்னல் வேகத்தில் பறந்துவிடுவார். இது வேற கதை…
இந்தசூழலில் இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம் என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் தரமற்ற இடியாப்பம் குறித்த புகார்களை அடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, இனி சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரும் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் கட்டாயம் உரிமம் அல்லது பதிவு பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் இலவசமாக உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, இடியாப்பம் தயாரிக்கும் போது சுத்தமான சூழலில், தரமான பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக தயாரிக்க வேண்டும்.
சளி, காய்ச்சல் உள்ளிட்ட எந்த ஒரு பாதிப்புகளும் இல்லாமல் இடியாப்பத்தை விற்பனை செய்து கொள்ளலாம் என விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த புதிய உத்தரவு மூலம் உணவுகளின் தரம் மேம்படுவதுடன், பொதுமக்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.
