இந்தியாவிலேயே முதன்முறையாக LGBTQIA PLUS சொல்லகராதியை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

Published On:

| By srinivasan

எல்.ஜி.பி.டி. பிரிவினரை கண்ணியமாக குறிப்பிடும் வகையிலான தமிழக அரசு வெளியிட்டுள்ள  சொல்லகராதியில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை  குறிப்பிடுவது தொடர்பான சொல்லகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணையில் உள்ளது.

 எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரை குறிப்பிடும் சொல்லகராதியை நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை 25ல் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று ( ஆகஸ்ட் 23 ) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் சொல்லகராதி குறித்த அரசு அறிவிப்பாணை கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டதாக கூறி,  அறிவிப்பாணை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மூன்றாம் பாலினத்தவர்களை மருவிய, மாறிய பாலினத்தவர் என்றும், திருநங்கை, திருநம்பி என இடத்துக்கு ஏற்ப அழைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன் பாலீர்ப்பு ஆண் (gay), தன்பாலீர்ப்பு பெண் (lesbian) என்றும், இரு பாலீர்ப்புடைய நபர் (bisexual) என்றோ அழைக்கலாம் எனவும், பால்புதுமையர் (queer) என அழைக்க வேண்டும் என அரசு அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதி,   எல்.ஜி.பி.டி. பிரிவினரை குறிப்பிட, இந்த சொற்களையே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

LGBTQIA+ tamil glossary

மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வரைவு விதிகள், சட்டத்துறை ஒப்புதல் பெற்று, உத்தரவுக்காக முதல்வர் முன் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், விதிகளை இறுதி செய்து அறிவிக்க அரசுத்தரப்பில் ஆறு மாத கால அவகாசம்  கோரப்பட்டது.

அதேபோல மூன்றாம் பாலினத்தவர்கள் கொள்கை வகுக்கவும் ஆறு மாத அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, ஏற்கனவே ஓராண்டு கடந்த நிலையில் மேலும் ஆறு மாதம் அவகாசம் கோருவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சமுதாயத்தில் ஓரங்கட்டப்படும் இப்பிரிவினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அறுவுறுத்தி, கொள்கை வகுக்கும் நடைமுறைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு… அரசின் நிலை என்ன?

மாணவி ஶ்ரீமதி உடற்கூறாய்வு: ஜிப்மர் அறிக்கை தாக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share