மத்திய அரசின் கருப்பு சட்டத்தை உறுதியாக எதிர்ப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக் கூடிய கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31-வது நாள் அவர்களது பதவி பறிக்கப்படும் என்ற சர்ச்சைக்குரிய மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் நேற்று (ஆகஸ்ட் -20)தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் -21) காலை சென்னை அண்ணா அறிவாலையத்தில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்களை வெளியிட்டு பேசுகையில் “நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர்.
இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இந்த சட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி கடுமையாக எதிர்த்ததோ, அதேபோல இந்த கருப்பு சட்டத்தை எதிர்ப்போம். இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள். மக்கள் பிரச்சனையை திசை திருப்ப செய்கிறார்கள். மக்களுடைய கவனத்தை திசை திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக அதை செய்கிறார்கள்” என குற்றம் சாட்டினார்.
