இந்தியில் வந்த மிஸ்டர் இந்தியா படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பிய பழம்பெரும் தயாரிப்பாளர் பாலாஜி இயக்குநராக கே.விஜயனை ஃபிக்ஸ் செய்து விட்டு; பாக்யராஜை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவெடுத்து நேரில் போய்ப் பேசினார். பாக்யராஜ், “எதற்கு ரீமேக் படம்? புதிதாக ஒரு கதையை உருவாக்கலாமே” என்றார். பாலாஜியோ ரீமேக் செய்வது என்பதில் உறுதியாக இருந்தார்.
ஒருவழியாக பாக்யராஜை ஒத்துக்கொள்ள வைத்து ஹீரோயினாக இந்தி நடிகை மீனாட்சி சேஷாத்ரியை ஒப்பந்தம் செய்து ஷூட்டிங்கும் தொடங்கியிருக்கிறது. ஆனால் இயக்குனர் கே.விஜயன் அகால மரணமடைந்துவிட்டார்.
பாக்யராஜிடம் சென்ற பாலாஜி, ‘நீங்கள் விஜயனின் மகன் சுந்தர் விஜயனை அருகே வைத்துக் கொண்டு இயக்கத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என கேட்க; பாக்யராஜும் ஒத்துக்கொண்டார்.. (டைட்டிலில் படத்தில் இயக்கம் என்ற இடத்தில் கே.விஜயன், சுந்தர் கே.விஜயன் என்றுதான் வரும்.)
படத்துக்கு சம்பளம் மட்டுமின்றி கோயம்புத்தூர் விநியோக உரிமையையும் தருவதாக பாக்யராஜிடம் பாலாஜி உறுதியளித்திருக்கிறார்.
ஆனால் பட்ஜெட் அதிகம் ஆகி விட்டது என்று காரணம் கூறி, பாலாஜியே கோவையிலும் விநியோகம் செய்யும் செயல்களில் இறங்க; அது பாக்யராஜுக்கு தெரியவந்ததை, அடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாக்கியராஜ் பஞ்சாயத்தைக் கொண்டு போனார்.
அது கை கொடுக்காமல் போக ஃபெப்ஸிக்கு கொண்டு செல்ல போராட்டங்கள் வெடித்தன.
வேறு வழியில்லாமல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் சென்றார் பாக்யராஜ்.
இந்த நிலைமையில் பாக்யராஜை சந்திக்க வந்த ரஜினி, ‘பாலாஜியுடன் மோதல் எதற்கு?.. அவர் ஒரு முரட்டு ஆள். துப்பாக்கிய காட்டி மிரட்டுகிறார்’ என சொல்ல; பாக்கியராஜுக்கு கோபம் வந்து விட்டது.
உடனே கொதிப்படைந்த பாக்யராஜ், ‘பாலாஜி துப்பாக்கியை எடுத்து சுடுவேன்னு சொன்னா நீங்க என்ன சொல்லணும் சார்? ‘என்ன சுட்டுவிடுவேன்னு எல்லாம் சொல்றீங்க.. நீங்க செய்வது பெரிய தவறு; அராஜகம், அநாகரீகம் என்றுதானே? அவர் கிட்ட சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு என்னிடம் வந்து பஞ்சாயத்து பேசுறீங்க?
அவருக்குத்தான் என் வீடு தெரியுமே. இங்கே வந்துதான் என்னை அந்தப் படத்துக்கு கமிட் செய்தார். எனவே அவர் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வர சொல்லுங்க’ என பாக்கியராஜ் படபடக்க,
உடனே ரஜினியோ, ‘இல்லை நீங்கள் செய்வது தவறு என்று பாலாஜியிடம் நான் அந்த இடத்திலேயே சொல்லிவிட்டேன்’ என்று சொல்லிவிட்டு இனியும் இந்தப் பிரச்னையில் நாம் தலையிடுவது சரியில்லை என்று சொல்லி ஒதுங்கி கொண்டாராம் ரஜினிகாந்த்.
அதோடு பிரச்னை முடிந்தது.
விநியோக உரிமையும் வரவில்லை. துப்பாக்கியும் வரவில்லை.
பின்னாளில் பாலாஜிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. அந்த சமயத்தில் பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் நேரில் சென்று பாலாஜியை நலம் விசாரிக்கப் போக, நெகிழ்ந்து போனாராம் பாலாஜி.
பகைமை பாராட்டாத கோபம்!
- ராஜ திருமகன்
