‘லெஜண்ட்’ அருள் சரவணன் நடிக்கவுள்ள படத்தின் கதை குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இதில் அருள் சரவணனுடன் இணைந்து விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
இந்த படத்திற்குப் பிறகு அவரது இரண்டாவது படம் குறித்து, நீண்ட நாட்களாக தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதற்கு நடுவில் மீசை, தாடியுடன் தோற்றத்தை முற்றிலும் மாற்றி சரவணன் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டார்.
அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்றன. அதோடு தன்னுடைய அடுத்த படத்திற்காகத் தான் சரவணன் தோற்றத்தை மாற்றியதாகவும் கூறப்பட்டது.
இதை நிரூபிப்பது போல துரை செந்தில்குமார் இயக்கத்தில் சரவணன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. அதோடு பேட்டி ஒன்றில் செந்தில்குமாரும் இதனை உறுதி செய்திருந்தார். இதுகுறித்த செய்தியை ஏற்கனவே நம்முடைய தளத்தில் நாம் வெளியிட்டு இருந்தோம்.
இந்த நிலையில் துரை.செந்தில்குமார்-அருள் சரவணன் கூட்டணி தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் இன்று (பிப்ரவரி 22) கோகுலம் ஸ்டுடியோஸில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.
கார் ஆக்ஷனை பின்னணியாக வைத்து இந்த படத்தின் கதையை செந்தில்குமார் எழுதி இருக்கிறாராம். இதை வைத்துப் பார்க்கும்போது ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் ‘எதிர்நீச்சல்’ படத்தில் இயக்குநராக அறிமுகமான துரை செந்தில்குமார் தொடர்ந்து அவரின் ‘காக்கி சட்டை’ படத்தையும் இயக்கினார்.
அடுத்ததாக தனுஷின் ‘கொடி’, ‘பட்டாஸ்’ படங்களை இயக்கினார். யாரும் எதிர்பாராதவிதமாக சூரியை நாயகனாக வைத்து ‘கருடன்’ படத்தை இயக்கியுள்ளார்.
தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கு பின்னர் அருள் சரவணனின் இரண்டாவது படத்தை செந்தில்குமார் இயக்கவிருக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ‘கொடி’ படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறாராம்.
இசையமைப்பாளாராக ஜிப்ரானை ஒப்பந்தம் செய்திட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இனி ஐபோனிலும் ’சென்னை பஸ்’ செயலி பயன்படுத்தலாம்!
துப்பாக்கிச்சூட்டில் விவசாயி உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!