வலதுசாரி அரசியல் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி மேலோங்கி இருக்கிற காலகட்டத்தில், இடதுசாரி அரசியல் தேவையை உணர்த்த கூடிய வகையில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகியுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
விடுதலை வெற்றியைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவான ‘விடுதலை இரண்டாம் பாகம் கடந்த 20 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
இதனையடுத்து அரசியல் தலைவர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் படத்தை பார்த்து தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பியுமான திருமாவளவன் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் ‘விடுதலை 2’ படத்தை பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடந்து அவர் பேசுகையில், “இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் விடுதலை 2 படம் பார்த்தோம். இத்திரைப்படம் தமிழ் திரையுலகில் முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது.
இடதுசாரி அரசியலின் தேவையை உணர்ந்து, முக்கியமான காலச்சூழலில் விடுதலை 2 வெளியாகி இருக்கிறது. வலதுசாரி அரசியல் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி மேலோங்கி இருக்கிற காலகட்டத்தில், இடதுசாரி அரசியல் தேவையை உணர்த்த கூடிய வகையில் இப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இதுவரை இயக்கியுள்ள அனைத்துப் படங்களுமே மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்தவகையில் இதுவும் ஒரு வெற்றிகரமான திரைப்படம். அதேவேளையில் இந்தப் படம் பேசியிருக்கிற அரசியல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
மக்களை அரசியல்படுத்தி, அமைப்பாக்கி போர்க்குணம் மிக்கவர்களாக வளர்த்தெடுக்கக்கூடிய அரசியல் இன்று இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசியல் என அழைக்கப்படுகிறது. இந்த வகை அரசியலை நுட்பமாக விவாதிக்கிற களமாகத்தான் விடுதலை பாகம் 2 அமைந்துள்ளது.
கம்யூனிச தத்துவம் எப்போதும் தோற்றதில்லை. அதை கையாண்ட களம், காலம், முறை உள்ளிட்ட பிழைகளால் அதைக் கையாண்ட நபர்கள் தோல்வியைத் தழுவி இருக்கலாம்.
தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்த பொன்பரப்பி தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னெடுத்த ஆயுத முறை தவறாக இருக்கலாம், ஆனால் அவர்களது கருத்து என்றும் நிலைத்திருக்கும்.
இது வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் அல்ல. அதிகார வர்க்கம் எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தின் பண்புகளைத் தான் வெளிப்படுத்தும் என்பதை இந்தத் திரைப்படம் காட்டுவதாகவும், இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தாண்டி அம்பேத்கர் அரசியலாக, பெரியார் அரசியலாக இருக்க வேண்டும்” என்று திருமாவளவன் பேசினார்.
தொடர்ந்து அவர், “தத்துவம், கொள்கை, கோட்பாடு என்கிற கருத்தியல் என்பது ஒரு அமைப்புக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் வெற்றி மாறன்.
தத்துவம் இல்லாத தலைவர்கள் கைதட்டும் ரசிகர்களைத்தான் உருவாக்குவார்கள். அவர்களால் போராளிகளை உருவாக்க முடியாது என்ற வசனம் யாரையும் மனதில் வைத்து எழுதப்படவில்லை. உலகத்துக்கே பொருந்தக்கூடிய கருத்து இது” என திருமாவளவன் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
தங்கம் விலையில் மாற்றமா? இன்று சவரன் எவ்வளவு?