கோவை பூ மார்க்கெட்டில் சிலீவ் லெஸ் உடை அணிந்து வந்த சட்டம் பயிலும் மாணவிக்கும், வியாபாரிகளுக்கும் இடையே ஆடை குறித்தான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் மாணவி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 24)ல் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனனி. இவர் ஆந்திராவில் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு சட்டம் படித்து வருகின்றார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த இவர் கடந்த ஞாயிற்று கிழமை சிலீவ் லெஸ் சுடிதார் அணிந்து கோவை பூ மார்கெட்டிற்கு தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த கடை உரிமையாளர் ஒருவர், சிலீவ் லெஸ் மாதிரி அரை குறை ஆடைகள் அணிந்தபடி வரக் கூடாது என்றும் கூறியுள்ளார். அதற்கு மாணவி ’எனது உடை சரியாகத்தான் இருக்கிறது, உங்களது பார்வையை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். அவங்க அவங்க டிரஸ் அவங்க அவங்க உரிமை’ என அந்த பூக்கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அந்த பெண்ணுடன் வந்த நபர் செல்போனில் பதிவு செய்தார்.
இதையடுத்து பூ மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை அந்த பெண்ணுடன் இருந்த நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவி ஜனனி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஜனனி, ”உடை குறித்து
அத்துமீறி ஆபாசமாக பேசிய பூ மார்க்கெட் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று நடந்து கொள்வது தவறு என்பதை அவர்கள் உணரும் விதமாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகவே தற்போது புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
