இன்றைய இளம் இயக்குநர்கள் தாங்கள் இயக்கிய முதல் படம் வெற்றி பெற்று பிரபலமானவுடன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படம் தயாரிப்பது வாடிக்கையாகி வருகிறது.
முருகதாஸ், ரஞ்சித், அட்லி ஆகியோர் வரிசையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உதவி இயக்குநர்கள் இயக்கும் படங்களைத் தயாரிக்க உள்ளார். ‘மாநகரம்’, கார்த்தி நடித்த ‘கைதி’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் அப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை இயக்கப்போகிறார் என்றும் அப்படத்தைக் கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வெளிவந்தது. எனினும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தற்போது லோகேஷ் கனகராஜுடன் ‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் உள்ளிட்ட சிலர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நல்ல திரைக்கதைகளுடன் தயாரிப்பாளர் தேடி அலைந்தாலும் வியாபார முக்கியத்துவமுள்ள நாயகன் கால்ஷீட் வாங்க முடியுமா என தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்கப்படுகிறது. கதையை நம்பி படம் தயாரிக்கத் தயாராக இல்லை. இந்த நிலையில் நாமே படம் தயாரிப்போம் என்கிற முடிவுக்கு லோகேஷ் கனகராஜ் வந்ததாக சொல்லப்படுகிறது.
அவர் தயாரிப்பில் முதல் படத்தை ரத்னகுமார் இயக்கவிருக்கிறார் என்றும் இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு மாஸ்டர் பட வெளியீட்டுக்கு பின் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
