அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக சிறையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
தனக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று வழக்கறிஞர்கள் சொன்னதன் அடிப்படையில் நம்பிக்கையாக இருந்த செந்தில் பாலாஜி ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் மீண்டும் இறுக்கமான மனநிலைக்கு சென்று விட்டார்.
காவேரி மருத்துவமனையில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, சில நாட்கள் ஓய்வெடுத்தபின் புழல் சிறைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி,
அங்கே யாருடனும் எதுவும் பேசாமல் மிகவும் இறுக்கமாகவே இருந்தார் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நெருங்கிய நாட்களில் சற்று எதிர்பார்ப்போடு இருந்தவர்,
அதுவும் கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் இறுக்கமான சூழலுக்கு திரும்பி விட்டார்.
இப்போதும் புழல் சிறையில் அவரது உடல் நிலைக்கு ஏற்ற உணவுகள் தரப்படுகின்றன. அவ்வப்போது வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் அவரை சந்திக்கிறார்கள்.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜாமீன் என்பது கடினமான ஒன்று என்பதால், அடுத்த கட்ட ஜாமீன் மனு முயற்சிகள் பற்றி செந்தில் பாலாஜியிடம் வழக்கறிஞர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக செந்தில் பாலாஜி முகத்தில் மீண்டும் ஒரு நம்பிக்கை பிறந்திருப்பதாக சொல்கிறார்கள் புழல் சிறை வட்டாரத்தினர்.
செந்தில் பாலாஜிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்திருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் மீண்டும் சிரித்த முகத்துடன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அதுபற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, “சிறைக்குள் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஆளும் தரப்பிலிருந்து ஒரு நம்பகமான தகவல் சென்றுள்ளது.
கவலைப்படாதீர்கள் உங்களுக்கு விரைவில் ஜாமீன் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை உள்ளது. அதற்கான சட்ட முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல… நீங்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததும் ஏற்கனவே நீங்கள் வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் பதவி மீண்டும் உங்களுக்கே வழங்கப்படும்.
நீங்கள் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது மேற்கொண்ட முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாகவே இப்போதும் அத்துறை செயல்பட்டு வருகிறது.
நீங்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததும், மீண்டும் மின்சார துறை உங்களுக்கு வழங்கப்படும் என்று செந்தில் பாலாஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள் புழல் வட்டாரத்தில்.
“முதலில் அவர் ஜாமீனில் வரட்டும்… அதன் பின் மீண்டும் மின்சாரம் என்றால், ஏற்கனவே அவர் வகித்து வந்த மதுவிலக்குத் துறை அவரிடம் வழங்கப்பட மாட்டாதா” என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
-வேந்தன்

Comments are closed.