நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சருக்கு முன்ஜாமின் ரத்து!

Published On:

| By Kalai

Land grab case Cancellation of anticipatory bail

வயதான தம்பதியினரின் 16 சென்ட் நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜு. இவரும், இவரது மனைவி பிரேமாவும் மஞ்சூர் அருகே உள்ள மணிச்சல் கிராமத்தில் 16 சென்ட் தேயிலைத் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

அதிமுக கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சுற்றுலா மற்றும் உணவுத்துறை அமைச்சருமான புத்தி சந்திரன் ராஜுவின் சகோதரருக்குச் சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராஜுவின் தேயிலைத் தோட்டத்தையும் விலைக்கு கேட்டுள்ளார். ஆனால் ராஜு விற்க மறுத்தால் தகராறில் ஈடுபட்டுள்ளார் புத்தி சந்திரன்.

ராஜுவின் சகோதரர்களிடம் வாங்கிய நிலத்தில் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த புத்தி சந்திரன், பொக்லைன் இயந்திரம் மூலம் ராஜுவின் தோட்டத்தில் இருந்த தேயிலை செடிகளையும் அகற்றியுள்ளார்.

இதையடுத்து ராஜூ தனக்கு சொந்தமான 16 சென்ட் தேயிலை தோட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் அபகரிக்க முயன்றதாக கடந்த மாதம் மஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனையடுத்து புத்தி சந்திரன் மீது மஞ்சூர் காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

புத்தி சந்திரன் இது வரை கைது செய்யப்படாமல் உள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இன்று(ஜனவரி 23) அந்த மனு விசாரணைக்கு வந்த போது அவரது முன்ஜாமீன் மனுவை மாவட்ட நீதிபதி முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கலை.ரா

இடைத்தேர்தலில் தனித்து களம் காணும் தேமுதிக : வேட்பாளர் அறிவிப்பு!

“அன்பான புத்திசாலி பெண் கிடைத்தால் திருமணம்” – ராகுல்காந்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share