லோக்பால்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

Published On:

| By Balaji

லோக்பால் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை பிப்ரவரி இறுதிக்குள் முடிவு செய்யும்படி உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள், தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா 2013ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து தாமதம் காட்டி வருகிறது.

ADVERTISEMENT

லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் யார் என்பதை ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க தேர்தல் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமை வகிக்கிறார். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா, பிரச்சார் பாரதி முன்னாள் தலைவர் சூரிய பிரகாஷ், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கிரண் குமார் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் இக்குழுவில் உள்ளனர்.

லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர் பொறுப்புகளுக்குத் தகுதி வாய்ந்தவர்களைத் தேடி அரசுக்கு பரிந்துரைப்பதே இக்குழுவின் பணி. இக்குழு பரிந்துரைத்த நபர்களை பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் ஆகியோர் இறுதி செய்வர். அதன்பிறகு அந்த நபர்கள் லோக்பால் பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள். இது சம்பந்தமான வழக்கு, இன்று (ஜனவரி 17) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, லோக்பால் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் எனவும், நியமனம் தொடர்பான பெயர்களைப் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு பிப்ரவரி மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உத்தரவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share