தபால் வாயிலாக மொபைல் பில்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் முறையை மாற்றி, மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் நடைமுறையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை முன்னிட்டு மொபைல் பில் கட்டணங்களில் 10 ரூபாய் சலுகை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடர்புச் சேவை நிறுவனம்தான் பிஎஸ்என்எல் நெட்வொர்க். இதில் 5.5 லட்சம் வாடிக்கையாளர்கள் லேண்ட்லைன் இணைப்பையும், 3.5 லட்சம் வாடிக்கையாளர்கள் போஸ்ட் பெய்டு மொபைல் போன் இணைப்புகளையும் பெற்றுள்ளனர். இவர்களின் மாதாந்திரக் கட்டண பில் தபால் வாயிலாக அனுப்பப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி வாடிக்கையாளர்களின் மாதாந்திர பில்களை அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பும் முறையை பிஎஸ்என்எல் நிறுவனம் அமல்படுத்துவதாக பிஎஸ்என்எல் உதவி பொது மேலாளரான விஜயா தெரிவித்துள்ளார்.
இதுவரையில் மின்னஞ்சல் பில் முறைக்கு 40,000 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த நடைமுறையின் கீழ் அனைத்து வாடிக்கையாளர்களும் விரைவில் கொண்டுவரப்படுவார்கள் எனவும், இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.10 கட்டணச் சலுகை வழங்குவதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய திட்டம் குறித்து வாடிக்கையாளர்களுக்குக் குறுஞ்செய்தி வாயிலாகத் தகவல்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. ’கோ கிரீன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இதர நெட்வொர்க் நிறுவனங்களில் ஏற்கெனவே மின்னஞ்சல் வாயிலாக மொபைல் கட்டண பில்களை அனுப்பும் முறை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,