தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இணைந்து உருவாகவுள்ள புதிய படத்தின் பணிகள் சென்ற ஆண்டே தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் ரஜினிகாந்த்தின் ‘பேட்ட’ திரைப்படம் காரணமாகத் தள்ளிப்போனது. பின்னர் அது சம்பந்தமாக எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில், படம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் கசிந்தன. இந்நிலையில், தற்போது படக்குழு படப்பிடிப்புக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளது.
இப்படத்தில் நடிக்க நடிகர், நடிகைகளை இறுதி செய்யும் பணி மதுரையில் தொடங்கியுள்ளது. ஆக்ஷன் கலந்த கேங்க்ஸ்டர் கதையாக அமையும் இத்திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் அமெரிக்காவில் நடப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகர் ஒருவரை படக்குழுவில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இத்திரைப்படத்தை 2017ஆம் ஆண்டின் வெற்றிப்படமான விக்ரம் வேதாவை தயாரித்த ‘ஒய் நாட்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்கிடையில் தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் ’அசுரன்’, துரை செந்தில்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்திவருகிறார். பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் இயக்கத்திலும் தனுஷ் அடுத்ததாக நடிக்கவுள்ளார்.
