பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கான விமானக் கட்டணம் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் பெரும்பாலும் ரயில் மற்றும் பேருந்துகளையே நாடுவர். முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் பேருந்துகளின் முன்பதிவு தீர்ந்துவிட்டால் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் விமானங்களுக்கு மவுசு அதிகரிக்கும். இந்நிலையில் தற்போது விமான சேவை நிறுவனங்களும் டிக்கெட்டுகளின் விலையைத் தாறுமாறாக உயர்த்தியுள்ளன.
வழக்கமான தினங்களில் விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லக் குறைந்தபட்சம் ரூ.1600 முதல் ரூ.5000 வரை வசூலிக்கப்படும். அது தற்போது ரூ.3159 முதல் ரூ.10,000 ஆக மாற்றப்பட்டுள்ளது. கோவை செல்லக் குறைந்தபட்ச விமானக் கட்டணம் ரூ.1800லிருந்து ரூ.1999ஆகவும், கொச்சி செல்ல குறைந்தபட்ச விமானக் கட்டணம் ரூ.1600லிருந்து ரூ.1700ஆகவும் அதிகரித்துள்ளது.
பண்டிகைக் காலப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு விமானக் கட்டணங்கள் உயர்த்துவது வாடிக்கைதான் என்றாலும், இந்த ஆண்டு மதுரைக்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகத் தென் மாவட்டப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
