இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக அங்கு செல்கிறார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ‘இந்திய பெருங்கடல் மாநாடு 2017’ ஆகஸ்ட் 31 அன்று தொடங்குகிறது. அமைதி, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவையே இந்த மாநாட்டின் கருப்பொருள்களாக கொண்டு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக இலங்கை செல்கிறார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, செஷல்ஸ் நாட்டின் துணை அதிபர் வின்சென்ட் மெரிடோன், சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சர் விவியான் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைக்கிறார்.
இந்தியா, இலங்கை, வங்காளதேசம், ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சக பிரதிநிதிகள் இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்கின்றனர். அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மூத்த அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் 35 நாடுகள் பங்கேற்கின்றன.
முதலாவது இந்திய பெருங்கடல் மாநாடு கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து இந்த மாநாட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
