பிரதமரின் வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டத்தின் கீழ் 8.5 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் *தி எகனாமிக் டைம்ஸ்* ஊடகத்திடம் பேசுகையில், ’ஊழியர் சேமலாப நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரதமரின் வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டத்தின் (பி.எம்.ஆர்.பி.ஒய்.) கீழ் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 85 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு விடும்.
இதில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஊழியர் சேமலாப நிதியத் திட்டத்தில் பலர் புதிதாக இணைக்கப்பட்டு அமைப்புசார்ந்த தொழிலாளர்களாக மாறியுள்ளனர். இதன்மூலம் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். ஆனால் ஊழியர் சேமலாப நிதியத்தின் மூலமாக வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த தகவல்களை வெளியிடுவது ஏமாற்று வேலை என்றும், உண்மையான வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வெளியே சொல்ல மோடி அரசுக்கு துணிவில்லை என்றும் எதிர்க்கட்சிகளும், வல்லுநர்களும் விமர்சித்து வருகின்றனர். ஊழியர் சேமலாப நிதியத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பலர் புதிதாக இணைவார்கள், பலர் வெளியேறுவார்கள் என்பதால் அதை வைத்து வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மதிப்பிட இயலாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
