கும்பகோணம் அரசினர் ஆண்கள் கலைக்கல்லூரியில் நடக்கும் தொடர் மாணவர் போராட்டத்தால் காலவரையின்றி கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தென் இந்தியாவின் கேம்பிரிட்ஜ் என்று போற்றப்படும் கும்பகோணம் அரசினர் ஆண்கள் கலைக்கல்லூரியில் பணிபுரியும் பெண் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர், தமிழ்த் துறையின் முதுநிலை 2-ஆம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும்போது, சாதிய ரீதியாகவும், பெண்களை தரக்குறைவாகவும் பேசினார் என்று மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் சில நாட்களுக்கு முன் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அந்த பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அக்கல்லூரி முதல்வர் ஆ.மாதவி நேற்று(ஆகஸ்ட் 27) ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். அதில் கல்லூரியில் அசாதாரண சூழல் நிலவுவதால், கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையின்றி மூடப்படுகிறது என்று அவர் அறிவித்துள்ளார்.
கும்பகோணம் கலைக்கல்லூரியில் கணித மேதை ராமானுஜம் சிறிது காலம் படித்துள்ளார், தியாகராஜ செட்டியார் மற்றும் உ.வே சாமிநாத ஐயர் ஆகியோர் தமிழ்த் துறையின் தலைவராக இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் ரூ.89.18 கோடி சொத்துகள் பறிமுதல் : அமலாக்கத்துறை அதிரடி!
வேற லெவல் வசதிகள்: 150 சொகுசு பேருந்துகள்… உதயநிதி தொடங்கி வைத்தார்!