தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்றக்கோரி, டெல்லியில் சோனியாவையும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் சந்தித்து புகார் அளித்துள்ளார்கள் தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர்கள்.
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது கே.எஸ்.அழகிரி பேசிய சில கருத்துகள் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அத்துடன் கே.எஸ்.அழகிரியின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை என்ற பேச்சும் நிலவி வந்தது.

இதனால் தமிழக காங்கிரசில் இருந்து கே.எஸ்.அழகிரியை மாற்றக்கோரி காங்கிரஸ் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன்,
கே.வி.தங்கபாலு ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றதை, அழகிரிக்கு எதிராக முன்னாள் தலைவர்கள்: ஸ்டியரிங் செய்யும் செல்வப் பெருந்தகை என்ற தலைப்பில் நேற்று(நவம்பர் 20) மின்னம்பலத்தில் விரிவாக எழுதியிருந்தோம்.
அதன்படியே கே.எஸ்.அழகிரி பற்றிய புகார் மனுவுடன் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தொகை ஆகியோர் டெல்லி சென்றனர்.
இந்த குழுவில் இடம்பெற வேண்டிய முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நவம்பர் 21 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் ஆய்வுக் கூட்டம் இருந்ததால் டெல்லிக்கு செல்லும் முடிவை கடைசி நேரத்தில் கைவிட்டார்.
செல்வப்பெருந்தகை தலைமையில் இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் நேற்று(நவம்பர் 20) மாலை காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து,
சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற வன்முறைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரியே முழுப் பொறுப்பு. இது உள்ளிட்ட காரணங்களால் தலைவர் பொறுப்பில் இருந்து கே.எஸ்.அழகிரியை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று(நவம்பர் 21) காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஜன்பத் சாலையில் உள்ள இல்லத்தில், தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் செல்வப்பெருந்தொகை ஆகியோர் சந்தித்தனர். சோனியா காந்தியை சந்திக்கும்போது இளங்கோவன் செல்லவில்லை.
அப்போது, கே.எஸ்.அழகிரி முழுநேர காங்கிரஸ் கமிட்டி தலைவராக செயல்படவில்லை எனவும், கட்சி அலுவலகத்திற்கே வருவதில்லை என்றும், கட்சியினர் அனைவரையும் அரவணைத்து செல்வதில்லை என்றும் சோனியாவிடம் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்கள்.
கலை.ரா
அழகிரிக்கு எதிராக முன்னாள் தலைவர்கள்: ஸ்டியரிங் செய்யும் செல்வப்பெருந்தகை