அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ், இன்று (டிசம்பர் 7) திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அதிமுகவில் தலைமை குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டு, இருவரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இதில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் எடப்பாடி வசம் உள்ளனர். பன்னீர் அணியில் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், கோவை செல்வராஜ் ஆகியோர் இருந்தனர். அதில் கோவை செல்வராஜ், பன்னீர் அணியின் கோவை மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து கோவை செல்வராஜ், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி விலகினார்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்.
திமுகவில் இணைந்தது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் சிறப்பான ஆட்சியைத் தந்து கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று நானும் என் ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தோம்.
1971இல் என்னுடைய 14 வயதில் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு செயல்பட்டேன்.
தற்போது இவ்வளவு நாள் கழித்து மீண்டும் தாய்க் கழகத்தில் சேர்ந்து செயல்படுவதற்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நான்கரை ஆண்டுக்காலத்தில் சுனாமி வந்து அழிவை ஏற்படுத்தியதுபோல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடும் மக்களும் அழிவைச் சந்தித்தனர்.
அவருடைய செயல்பாட்டின் மூலம் சீரழிந்த தமிழ்நாட்டை, இன்றைக்கு சீர்படுத்தி மக்களின் மனநிலையைப் புரிந்து ஆட்சி செய்துவருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுகவில் இருந்த காலம் வரை, அவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசியதற்காக மக்களிடம் இன்றைய தினம் பாவ மன்னிப்பு வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
Comments are closed.