கோவை கார் குண்டுவெடிப்பு; வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

Published On:

| By Vinodh Arulappan

கடந்த 22 ஆம் தேதி கோவை உக்கடம் அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த சம்பவத்தில் போலீசார் பல தகவல்களை மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிமுக, பாஜக, அமமுக, புதிய தமிழகம் என எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுகவின் கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியும், காவல்துறை இதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “விபத்து நடந்த இடத்தில் அபாயகரமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆணிகள், கோலி குண்டுகள், இரும்பு குண்டுகள் (பால்ரஸ்) போன்றவை சிதறிக் கிடந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. இது உண்மையிலேயே மிகப் பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது” எனவும் உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையை விளக்குவதாகவே இது பார்க்கப்படுவதாக, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தமுமின்றி, சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளையும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த வெடிவிபத்து குறித்து மிக கடுமையாக அரசை விமர்சித்துள்ளார். “இது தீவிரவாத செயல் என்று கூறுவதற்கு ஏன் அரசு மறுக்கின்றது” என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், இது தமிழக உளவுத்துறையின் தோல்வி என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இது சந்தேகத்திற்கு இடமின்றி தற்கொலை படை தாக்குதல் தான் ஆனால் தமிழக காவல்துறை, திட்டமிட்டு அதை மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்பது தெளிவாகிறது” என்றும் வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதாகவும், அரசிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இது தமிழகத்தையும் – கோவையையும் நிரந்தர கலவர பூமியாக்கும் திட்டம் என விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன், பதிவிட்டுள்ள டிவிட்டில், மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் வகையில் நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன எனவும் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிக்காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹருல்லா விடுத்துள்ள அறிக்கையில், “பயங்கரவாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும். தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் தீவிரவாத விஷமச் செயல்கள் இருக்குமாயின் அது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்படியாக அனைத்து எதிர்கட்சியினரும் அரசிற்கும் காவல்துறைக்கும் வெளிப்படையான, கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இவ்விஷயத்தில் அமைதி காக்கின்றன.

மேலும், நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மையமும் இந்த சம்பவத்தில் இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை.

பாதுகாப்பு வளையத்தில் கோவை; துணை ராணுவப்படையினர் வருகை!

செரினா வில்லியம்ஸ் ரிட்டன்ஸ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share