“எத்தனை காலம் ஆனாலும் உண்மையே வெல்லும்”. இது கேரளாவைச் சேர்ந்த ஜோமனின் வார்த்தைகள். Kottayam teacher cleared of false molestation
கேரள மாநிலம் சாந்துருதில் மதுரவேலி பகுதியைச் சேர்ந்தவர் ஜோமைன். வயது 48. ஆசிரியரான இவர் கோட்டயத்தில் உள்ள குருப்பந்தாராவில் பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் ஒன்றை வைத்திருந்தார். இங்கு 40க்கும் அதிகமானோர் பயின்று வந்தனர். இவருக்கு பள்ளிச் செல்லும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவரது இன்ஸ்டிடியூட்டில் பயின்ற 21 வயது மாணவி ஒருவர், தன்னை ஜோமைன் இருமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஜோமைன் கைது செய்யப்பட்டு கோட்டையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார்.
பாலியல் புகாரால் ஜோமைனின் இன்ஸ்டிடியூட்டையும் மூடும் நிலை ஏற்பட்டது. இந்த புகாரால் அந்த குடும்பமே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. வாழ்வாதாரத்துக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைக்கு சென்றுவிட்டனர். ஜோமைன் வாழ்க்கை சோகக் கடலில் மூழ்கியது.
அதே சமயம் அந்த பெண் திருமணம் செய்துகொண்டு தனது கணவரோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் ஜோமைன் கஷ்டப்படும் தகவல் புகார் அளித்த அந்த பெண்ணின் காதுக்கு தனது தோழி மூலம் சென்றது. இதனால் மனம் வருந்திய அந்த பெண் கடந்த ஜனவரி மாதம் கோட்டையம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
“ஜோமைன் என்னை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் இப்படி பொய் சொல்லிவிட்டேன்” என்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து பாலியல் வழக்கில் இருந்து ஜோமனை நீதிமன்றம் விடுவித்தது.
மூன்று வாரங்களுக்கு முன்பு, மதுரவேலி தேவாலயத்துக்கு வந்த புகார்தாரரான அந்த பெண் தனது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினருடன் ஜோமைனிடம் மீண்டும் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், “சட்டம் மற்றும் பொதுமக்கள் முன் உண்மை நிரூபிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும், எவ்வளவு காலம் ஆனாலும் உண்மை வெல்லும்” என்றும் ஜோமைன் கூறியுள்ளார்.
மேலும் அவர், “நான் உண்மையைச் சொன்னாலும், யாரும் என்னை நம்பவில்லை. எல்லோரும் என்னை ஒரு குற்றவாளியைப் போலப் பார்த்த பரிதாபகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். சில சமயம் நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்.
பகல் வெளிச்சத்தைக் கூடப் பார்த்து பயந்தேன். என்னுடைய சொந்த நிறுவனம் மூடப்பட்டது. நான் பெயிண்டிங் மற்றும் தினக்கூலி வேலைக்குக் கூடச் சென்றேன். என் மனைவியையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. என் குடும்பத்தினர் எனக்குப் பக்கபலமாக இருந்ததுதான் ஒரே ஆறுதல்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது பொய் புகார் அளிக்க தூண்டியவர்கள் மீதும், பொய் புகார் அளித்த அந்த பெண் மீது சட்டம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? ஜோமைனின் மனவலிக்கும் அவரது பொருளாதாரத்திற்கும் நிவாரணம் கிடைக்குமா? ஆசிரியர் ஜோமோன் இழந்தவை அவருக்கு திரும்ப கிடைக்குமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. Kottayam teacher cleared of false molestation