கொடநாடு வழக்கு: அரசு தரப்பில் வைத்த முக்கிய கோரிக்கை!

Published On:

| By Selvam

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார்.

தனிப்படை போலீசார் விசாரித்து வந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நீதிபதி முருகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரி முருகவேல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜகான், “சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். தனிப்படை போலீசார் கைப்பற்றிய 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களின் உண்மை தன்மை அறியும் சோதனையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தனிப்படை போலீசார் விசாரித்த சாட்சிகளின் ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கின் விசாரணையை மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் வேண்டும்.” என்று வாதிட்டார்.

இதனை தொடர்ந்து நீதிபதி முருகன் வழக்கின் விசாரணையை ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செல்வம்

மாநில மொழிகளுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர்!

திமுக அரசுக்கு எதிராக அதிமுக 3 நாள் ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share