மலைகளின் இளவரசியான கொடைக்கானலின் இயற்கை அழகினை ரசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர், இவர்களை மகிழ்விக்கும் வண்ணம் மே மாத சீசன் காலங்களில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வண்ண மலர்செடிகள் நடப்பட்டு காய்கறிகளால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள், கிங்காங் மனிதகுரங்கு, தேச தலைவர்களின் படங்கள், மயில், டயனோசர், உலக அதிசயங்களான தாஜ்மஹால், மற்றும் இந்தியா கேட், அலங்கார வாயில்கள் ஆகியவை மலர்களால் உருவாக்கம், செய்யப்படும்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் பரவலால் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் நேரடியாக மலர்கண்காட்சியை காணமுடியாமலும், ரசிக்க முடியாமலும் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது, இதனை தொடர்ந்து கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
வழக்கமாக கோடைவிழா நடைபெறும் மே மாதத்தில் சுமார் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வரை வந்து செல்வார்கள், இந்த ஆண்டு கொடைக்கானலில் நிலவும் இதமான, ரம்யமான காலநிலையை அனுபவிக்கவும், பசுமை போர்த்திய மலைப்பகுதிகளை காணவும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூங்கா மலர்படுகைகளில் படிப்படியாக பூக்கத் துவங்கியுள்ள மலர்கள் கோடைவிழா மலர் கண்காட்சி நடைபெறும் மே மாத இறுதி வாரத்தில், பூங்காவில் உள்ள அனைத்து விதமான மலர்களும், பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கி சுற்றுலாபயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.