அமலாக்கத் துறை இரண்டாவது முறை நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
தொடர்ந்து, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அமலாக்கத் துறை தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு கடிதம் அனுப்பி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையில் வேலைவாய்ப்பு நியமனங்கள் மற்றும் டெண்டர்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை துறை அமைச்சர் கே.என்.நேரு மீது சுமத்தியுள்ளது.
இரண்டாவதாக அனுப்பிய கடிதத்தில் , நகராட்சி நிர்வாகத் துறையால் வழங்கப்படும் டெண்டர்களில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், அதன்மூலம் 1,020 கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும் கூறியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கூட்டம் முடிந்த பின் கலைஞர் அறிவாலயத்துக்கு வெளியே வந்த அமைச்சர் கே.என்.நேருவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ‘அதெல்லாம் ஒன்றுமில்லை… நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
