இறாலைக்கொண்டு பொதுவாக ஃப்ரை, தொக்கு, குழம்பு ஆகியவற்றை மட்டுமே செய்வது வழக்கம். சருமப் பொலிவுக்கும் கூந்தல் உதிர்வைத் தடுப்பதிலும் முக்கிய பங்காற்றும் இறாலில் துவையல் செய்தும் ருசிக்கலாம். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)
பூண்டு – 4-5 பல் (நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டேபிள்ஸ்பூன்
இறால் – 250 கிராம் (சுத்தம் செய்து நரம்பு நீக்கவும்)
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5-6 (அல்லது ருசிக்கேற்ப)
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
இறாலுடன் மஞ்சள்தூள் சேர்த்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அது லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கி கொத்தமல்லி இலைகள், இறால் சேர்த்துக் கிளறி நன்கு வேகவைக்கவும். இந்தக் கலவையை ஆறவிட்டு, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். தயிர் சாதத்துடன் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…