கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் அருகே உள்ள சர்வீஸ் சாலைகளை பயன்படுத்த முடியாத நிலையில் அங்குள்ள பள்ளி மாணவர்களின் பெற்றோர் இன்று (ஜனவரி 3) சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சமீபத்தில் திறக்கப்பட்டது. அங்கிருந்து தான் தற்போதுதென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் புறப்படுகின்றன.
அவ்வாறு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து புறப்பட்டு அருகே சர்வீஸ் சாலை வழியாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது.
இந்த சர்வீஸ் சாலையை தான் அந்த பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் நேற்று பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

ஆனால் இன்று காலையும் அதே நிலையே தொடர்ந்ததால் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்து அங்கு வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகவும், விரைவில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர்.
அதனை ஏற்று போராட்டம் தற்போது கைவிடப்பட்ட நிலையில், போக்குவரத்து சீரமைக்கப்பட்டு மீண்டும் பேருந்துகள் அங்கு இயக்கப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”தகுதியில்லா நிர்மலா சீதாராமனை நீக்க வேண்டும்: ஐ.ஆர்.எஸ். அதிகாரி குற்றச்சாட்டு

Comments are closed.