ஆடை சுதந்திரத்திற்கு எல்லை இருக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை பீளமேடு பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆடை அலங்கார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு குஷ்பு பரிசுகளை வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள் என்றால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நான் கட்டும் புடவைகளில் அதிகப்படியானவை கைத்தறி புடவைகள் தான். மேற்கிந்திய உடைகளை அணிய வேண்டாம் என்று நான் யாரையும் சொல்லவில்லை. ஆனால் நமது கலாச்சாரத்தை மறந்துவிட வேண்டாம்.
ஆடை சுதந்திரம் என்பது இருக்கலாம். ஆனால் மனிதர்கள் ஆறாவது அறிவு படைத்தவர்கள் என்பதால் நமக்கு எல்லை என்பது தெரியும். அந்த எல்லையை மீறி போகவேண்டாம். இல்லையென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.
ஆடை அணிவதில் எல்லை என்பது ஒவ்வொருத்தரை பொறுத்தது. என்னை பொறுத்தவரை சேலை தான் எனது எல்லை” என்றார்.
இதனிடையே நிகழ்ச்சியின் போது குஷ்பு மற்றும் வானதி சீனிவாசன் மேடையில் ‘ரேம்ப் வாக்’ செய்தனர். அப்போது அரங்கத்தில் இருந்தவர்கள் கைதட்டி உற்சாகமாக கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.
https://twitter.com/kovaimmk/status/1688480204526637056?s=20
குஷ்பு மற்றும் வானதி சீனிவாசன் ரேம்ப் வாக் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மோனிஷா
காவிரி நீர் – திமுக அரசுக்கு பொறுப்பில்லை : ஓபிஎஸ்
2014 -2023 : பணமோசடி புகார் முதல் EDக்கு அனுமதி வரை – செந்தில் பாலாஜி வழக்கின் முழு டைம்லைன்!
