குஜராத்துக்கு 608 கோடி, தமிழ்நாட்டுக்கு 33 கோடி: காரணம் சொல்லும் அண்ணாமலை

Published On:

| By Prakash

மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் சார்பில் உருவாக்கப்பட்டதுதான் கேலோ இந்தியா திட்டம். இந்த திட்டத்தின்கீழ் ஊரக, உள்நாட்டு மற்றும் பழங்குடியினர் விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இதில் முக்கியமாக பாரம்பரிய விளையாட்டான மல்லர்கம்பம், களரிபயத்து, கத்கா மற்றும் சிலம்பம் போன்றவை உள்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளாக அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன.

இந்த பிரிவின் கீழ் கட்டமைப்புகளை உருவாக்கவும், சாதனங்கள் வாங்கவும், பயிற்சியாளர்களை நியமிக்கவும், பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் உதவித்தொகை வழங்கவும் மானியங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

அந்த வகையில், மத்திய அரசு சமீபத்தில் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ், 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்திற்கு 33 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. குஜராத்துக்கு இதே திட்டத்தின் கீழ் 608 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பதில்

ADVERTISEMENT

இந்த நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என தமிழக அரசின் தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

கேலோ இந்தியா திட்டத்தின் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநில அரசின் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.

ஆனால், இந்தத் திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல், தெரிந்துகொள்ள எந்தவித முயற்சியையும் எடுக்காமல் பொய்களைப் பரப்பிவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குக் தலைகுனிவு.

இது ஒரு டிமாண்ட் டிரைவன் (demand driven) திட்டம். மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தி மத்திய அரசிடம் நிதி பெற்று தங்களது மாநில விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளனர்.

மாநில பட்டியலில் உள்ள விளையாட்டுத் துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

நிதிஷ் ராஜினாமா: பிகார் புதிய முதல்வர் யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share