கதர், காதி பொருட்களின் விற்பனை 400% அதிகரிப்பு: மோடி

Published On:

| By Aara

நம் நாட்டில் காதி மற்றும் கைத்தறி விற்பனை 400 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இன்று (ஜூலை 28) மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது இதை மோடி குறிப்பிட்டுள்ளார்.

“ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று தேசிய கைத்தறி தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இப்போதெல்லாம், கைத்தறிப் பொருட்கள் மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருப்பதைக் காணும் போது, இது மிகவும் பலமானதாக, ஆழமானதாக இருக்கிறது.

இப்போது பல தனியார் நிறுவனங்களும் கூட செயற்கை நுண்ணறிவு மூலம் கைத்தறி உற்பத்தி மற்றும் நீடித்த பாணிக்கு ஊக்கமளித்து வருகின்றன. கோஷா AI, ஹேண்ட்லூம் இண்டியா, டி-ஜன்க், நோவாடேக்ஸ், ப்ரும்மபுத்ரா ஃபேபிள்ஸ் போன்ற பல ஸ்டார்ட் அப்புகளும் கூட கைத்தறிப் பொருட்களை வெகுஜனப் பிரியமானவையாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கின்றன.

பலர் தங்களிடங்களில் இப்படிப்பட்ட உள்ளூர் பொருட்களை மேலும் பிரபலமானவையாக ஆக்குவதில் முனைந்திருக்கிறார்கள் என்ற தகவல் பிடித்த விஷயமாக இருக்கிறது. நீங்களும் கூட ஹேஷ்டேக் மை ப்ராடக்ட் மை ப்ரைட் என்ற பெயரில் சமூக ஊடகத்தில் இப்படிப்பட்ட உள்ளூர் பொருட்கள் பற்றி தரவேற்றம் செய்யுங்கள். உங்களுடைய இந்த முயற்சி, பலரின் வாழ்க்கையையே கூட மாற்ற வல்லது.

கைத்தறியோடு கூடவே நான் காதி பற்றியும் பேச விரும்புகிறேன். உங்களில் பலர் கதராடைகளை முன்பு பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள், ஆனால் இப்போதெல்லாம் மிகப் பெருமையோடு கதராடைகளை உடுத்தி வருவீர்கள். காதி கிராமோத்யோக் பவனத்தின் வியாபாரம் முதன்முறையாக ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள்!! ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாய்!!

காதிப்பொருட்களின் விற்பனை எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது தெரியுமா? 400 சதவீதம். காதிப் பொருட்களின், கைத்தறி ஆடைகளின், இந்த வளர்ந்துவரும் விற்பனை, அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பின் புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கி வருகிறது.

இந்தத் தொழிலோடு மிக அதிக அளவில் பெண்கள் இணைந்திருக்கிறார்கள் எனும் போது, மிகப்பெரிய ஆதாயமும் கூட அவர்களுக்குத் தானே ஏற்படுகிறது!! நான் மீண்டும் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்களிடத்திலே வகைவகையான ஆடைகள் இருக்கலாம், நீங்கள் இதுவரை கதராடைகளை வாங்காமலும் கூட இருந்திருக்கலாம், ஆனால் இந்த ஆண்டு தொடங்குங்கள். ஆகஸ்ட் மாதம் வந்தே விட்டது, இது நாடு சுதந்திரம் அடைந்த மாதம், புரட்சிக்கான மாதம். கதராடைகளை வாங்க, இதைவிடச் சிறப்பான சந்தர்ப்பம் வேறு என்ன இருக்க முடியும்?” என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

வேந்தன்

கட்டபொம்மன் சிலை எங்கே? – நெல்லை கலெக்டருக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்!

Paris Olympics 2024: இந்தியாவின் பதக்க வேட்டை ஸ்டார்ட்… வெண்கலத்தை தட்டித்தூக்கிய மனுபாக்கர்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share