ரு பெரிய நடிகரின் படம் வந்தால் அந்த தேதியில் வேறு படங்களை வெளியிடும் போக்கு குறைந்து, தற்போது அது இல்லாமல் போனது. போட்டிக்குப் படங்கள் இல்லாமல் தனியாக வந்து மொத்த சினிமா வசூலை எடுத்துவிட்டு அதை வசூல் சாதனையாகப் பெருமை பேசும்போக்கு கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சினிமா கதாநாயகர்களிடம் மேலோங்கி இருக்கிறது.
விஜய் நடிப்பில் 2019இல் வெளியான பிகில் படத்துடன் கார்த்தி நடித்த கைதி நேரடியாக களத்தில் சந்தித்தது. குறைவான திரையரங்குகளில் வெளியானது கைதி. எல்லோரது பார்வையும் பிகில் நோக்கி இருந்தது. முதல் இரண்டு நாட்கள் பிகில் கல்லாவை நிரப்பியது. மூன்றாம் நாளில் இருந்து கைதி வசூலில் மட்டுமல்ல; பார்வையாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இந்த வாரத்தைப் பொறுத்தவரையில் நேற்று ‘பீஸ்ட்’ படம் வெளியானது, இன்று ‘கேஜிஎஃப் 2’ படம் வெளியாக உள்ளது.
விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்துடன் ‘கேஜிஎஃப் 2’ படம், அதுவும் ஒரு கன்னட டப்பிங் படம் போட்டி போடுவதா என விஜய் ரசிகர்கள் பலரும் ‘கேஜிஎஃப் 2’ பற்றி சமூக வலைதளங்களில் அதிகமாகக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால், ‘கேஜிஎஃப் 2’ நாயகன் யஷ், இது போட்டியல்ல, இரண்டு படங்களையும் கொண்டாடுங்கள் என்று கூறினார்.
நேற்று ‘பீஸ்ட்’ படம் வெளிவந்துவிட்டது. படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் வந்து கொண்டிருக்கிறது.
எனவே, இன்று முதல் ‘கேஜிஎஃப் 2’ படம் ‘பீஸ்ட்’ போட்டியை எளிதில் சமாளித்துவிடும் என்கிறார்கள் விமர்சகர்கள். குறிப்பாக தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்கு தானாகவே வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
‘பீஸ்ட்’ கதாநாயகன் ரா அதிகாரியான வீரராகவன், ‘கேஜிஎஃப் 2’ ரவுடி ராக்கிக்கு எளிதில் வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார் என்பதுதான் திரையுலகில் நேற்றைய தினம் பேசும்பொழுதாக இருந்தது.
கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றதைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கேற்றபடி படத்துக்கான வியாபாரமும் உலக அளவில் பெரிதாக நடந்துள்ளது. இந்தியில் வியாபார அளவை விரிவாக்கவே படத்தில் இந்தி நடிகரான சஞ்சய் தத், ரவீணா டாண்டன் ஆகியோரை நடிக்க வைத்துள்ளார்கள்.
சுமார் 200 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தின் உலக வியாபாரம் 400 கோடி அளவுக்கு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகா விநியோக உரிமை மட்டும் 150 கோடி. அங்குள்ள 900 தியேட்டர்களில் 550 தியேட்டர்களில் ‘கேஜிஎஃப் 2’ வெளியாகிறது.
தெலுங்கு உரிமை 78 கோடி, தமிழ்நாடு விநியோக உரிமை 40 கோடி, இந்தி உரிமை 100 கோடி, வெளிநாடு உரிமை 75 கோடி என இந்தப் படத்தின் மொத்த வியாபார மதிப்பு 443 கோடி ரூபாய் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் ஏப்ரல் 14, 15, 16, 17 ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ‘கேஜிஎஃப் 2’ படத்தைப் பார்க்கப் பலரும் ஆர்வம்காட்டி வருகிறார்கள். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூலை ‘கேஜிஎஃப் 2’ எளிதில் முறியடிக்க வாய்ப்பு என்றே இந்தி சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 3,000 காட்சிகளுக்கு மேல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் இந்தப் படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்திருக்கிறது. கர்நாடகாவில் கன்னட திரைப்படத்துக்கு இப்படி நடப்பது இதுவே முதன்முறை என்கின்றனர்.
முன்பதிவு கணக்குகளை வைத்து விநியோகஸ்தர்கள் படத்தின் வசூலையும் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் முதல் நாளில் மட்டும் 90 கோடி ரூபாய்க்கு மேல் ‘கேஜிஎஃப் – 2’ வசூலிக்கும் என்றும் கர்நாடகாவில் மட்டும் ரூபாய் 30 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றும் கூறுகிறார்கள்.
கர்நாடகாவில் அதிக திரைகளில் வெளியான திரைப்படமாக மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ இருந்து வருகிறது. ஆனால், இந்த சாதனையை கேஜிஎஃப் – 2 முறியடிக்கிறது, பெங்களூரூவில் மட்டும் முதல் நாளில் 1,500 காட்சிகளும் கர்நாடக மாநிலம் முழுவதும் சுமார் 3,000 காட்சிகளைக் காணும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் 5 முதல் 6 காட்சிகளைத் திரையிட பல திரையரங்குகள், மல்ட்டி ப்ளக்ஸ் திட்டமிட்டுள்ளதால் நிச்சயம் 3,000 காட்சிகள் என்ற வரலாற்று சாதனையை கே.ஜி.எஃப் 2 படைக்கும் என்றே கூறுகிறார்கள்.
திரைப்படத்துக்கான டிக்கெட் விலையும் தமிழகத்தில் பீஸ்ட் படத்துக்கு டிக்கெட் விலை அதிகமாக விற்கப்பட்டது போல் கேஜிஎஃப் – 2 திரைப்படத்துக்கும் மூன்று மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரூவில் உள்ள திரையரங்குகளில் ரூ.100 மதிப்புள்ள டிக்கெட் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகாவின் பல திரையரங்குகளிலும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.
இந்தப் படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இந்தி திரை உலக ரசிகர்களை கவர்வதற்காக குறிப்பாக மும்பை மக்களை கவர்வதற்காக படக் குழுவினர் அந்த மாநகரத்தில் அமைந்திருக்கும் கார்னிவல் சினிமாஸ் என்ற திரைப்பட வளாகத்தில் 100 அடி உயரத்தில் படத்தின் நாயகனான யஷ் அவர்களுக்கு பிரமாண்டமான கட் அவுட்டை வைத்திருக்கிறார்கள். யஷ்ஷின் பிரமாண்டமான கட் அவுட்டை மும்பைவாசிகள் அண்ணாந்து பார்த்து வியக்கிறார்கள்.
இதன் காரணமாக ‘கேஜிஎஃப் சாப்டர் 2’ முதல் நாளன்று இந்திப் பதிப்பில் வசூல் சாதனை படைக்கும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இதனிடையே இந்தி திரை உலகில் முதன்முதலாக நடிகர் ஒருவருக்கு 100 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது சாதனையாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்ல உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் வெளியாகும் முதல் கன்னடப்படம் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறது கேஜிஎஃப். பட வெளியீட்டுக்கு முன்பே பல்வேறு சாதனைகளை தனக்கு சொந்தமாக்கியுள்ள கேஜிஎஃப் வசூலிலும் சாதனை படைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
**-இராமானுஜம்**
b‘பீஸ்ட்’டை சமாளிக்குமா ‘கேஜிஎஃப்-2’?
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel