கேரளா மாநிலத்தின் பெயரை “கேரளம்” (KERALAM) என மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்க இருக்கிறது.
கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற கோரி 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது.
இதனையடுத்து 2024-ம் ஆண்டு உரிய திருத்தங்களுடன் அரசியல் சாசனத்தின் 3–வது பிரிவின் கீழ் மற்றொரு தீர்மானம், கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது கேரளா மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளா மாநில அரசின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அம்மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க இருக்கிறது.
நாடு விடுதலை அடைந்த நமது மாநிலம், ‘மெட்ராஸ் மாகாணம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது 1969-ம் ஆண்டு ‘மெட்ராஸ் மாகாணம்’ என்பது ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
