முதல் முறையாக திருநம்பி, திருநங்கை தம்பதிக்கு குழந்தை

Published On:

| By Monisha

நாட்டிலேயே முதல் முறையாக திருநம்பி, திருநங்கை தம்பதியினருக்கு குழந்தை பிறந்த ஆச்சரியமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடுவைச் சேர்ந்தவர் ஜியா பவல் (21). இவர் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. அதே கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜஹாத் (23) பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர்.

ADVERTISEMENT

இவர்கள் இருவரும் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் தாங்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அறிந்து கொண்டதிலிருந்து காதல் வயப்பட்டுள்ளனர்.

பின்னர் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மற்ற தம்பதிகளைப் போல தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசை இவர்கள் இருவர் மனதிலும் உதித்திருக்கிறது.

ADVERTISEMENT
kerala tansgender couple become parents

இவர்களால் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்று கொள்வதையோ, ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதையோ செய்ய இயலவில்லை. இதனால், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுள்ளனர்.

பெண்ணாக இருந்து ஆணாக ஜஹாத் மாறியபோதும், அவரது கருப்பை அகற்றப்படாததால் அவர் கருத்தரிப்பது சாத்தியம் என மருத்துவர்கள் தெரிவித்து, உரிய ஆலோசனைகளை வழங்கி அனுப்பியுள்ளனர்.

ADVERTISEMENT

பின்னர் ஜஹாத் கர்ப்பம் தரித்த நிலையில் தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வந்துள்ளனர்.

ஜியா பவல் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் பெற்றோராகப் போகிறோம் என மகிழ்ச்சியாக வீடியோ பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

kerala tansgender couple become parents

இந்நிலையில் ஜஹாத்துக்கு நேற்று (பிப்ரவரி 8) கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

அவர்களுக்குக் குழந்தை பிறந்தது குறித்தும் ஜியா பவல் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ஜஹாத்தும் குழந்தையும் நலமாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் பிறந்தது பெண் குழந்தையா, ஆண் குழந்தையா என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. இது குறித்து பொதுவெளியில் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒருவர் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக் கொண்டிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குக் குழந்தை பிறந்துள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மோனிஷா

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு புகைப்படங்கள்: கொந்தளித்த டிஆர்கே கிரண்

’எஸ்எஸ்எல்வி -டி2’: முதல் தோல்வியால் இஸ்ரோ விஞ்ஞானிகளின் முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share