கேரளாவில் கடந்த டிசம்பர் 9 மற்றும் 11-ல் உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று டிசம்பர் 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின
கேரளா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:
- எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது.
- ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
- பாரதிய ஜனதா கட்சி (BJP) முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 6 மாநகராட்சிகளில் கொச்சி, கொல்லம், திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய 4 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது; கோழிக்கோடு மாநகராட்சியை இடதுசாரிகளின் LDF வென்றது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜகவின் NDA கைப்பற்றி, கேரள அரசியலில் சரித்திரம் படைத்துள்ளது.
- மொத்தம் 941 கிராம பஞ்சாயத்துகளில் UDF 504 இடங்களிலும், LDF 341 இடங்களிலும், NDA 26 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
- 152 வட்டார பஞ்சாயத்துகளில் UDF 79 இடங்களிலும், LDF 63 இடங்களிலும் வென்றுள்ளன.
- 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் UDF மற்றும் LDF தலா 7 இடங்களைக் கைப்பற்றின.
- 87 நகராட்சிகளில் UDF 54 இடங்களிலும், LDF 28 இடங்களிலும், NDA 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
- இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) மூன்று பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
- கட்சிகள் கைப்பற்றிய வார்டுகள்: காங்கிரஸ் – 7777; சிபிஎம் – 7402; முஸ்லிம் லீக் – 2826; பாஜக – 1910; சிபிஐ- 1012; கேரளா காங்கிரஸ்- 332; கேரளா காங்கிரஸ் (மணி) – 245; எஸ்டிபிஐ – 97.
2020 தேர்தலுடன் ஒப்பீடு
- 2020ல் ஆளும் இடது கூட்டணி 941 கிராம பஞ்சாயத்துகளில் 514, 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 11, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், திருச்சூர் என 4 மாநகராட்சிகள் என பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளை LDF கைப்பற்றியது. ஆனால் தற்போதைய 2025 தேர்தலில் கிராம பஞ்சாயத்துகளில் 514ல் இருந்து 341 ஆகவும், மாவட்ட பஞ்சாயத்துகளில் 11ல் இருந்து 7 ஆகவும், மாநகராட்சிகளில் 4ல் இருந்து 1 ஆகவும் LDFன் வெற்றி குறைந்துவிட்டது.
- காங்கிரஸின் UDF,கடந்த 2020 தேர்தலில் 321 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 மாநகராட்சிகளில் மட்டுமே வென்றது. இந்த முறை கிராம பஞ்சாயத்துகளில் 504 இடங்களையும், மாவட்ட பஞ்சாயத்துகளில் 7 இடங்களையும், 4 மாநகராட்சிகளையும் வென்று விஸ்வரூப வெற்றியைப் பெற்றுள்ளது.
- 2020ல் எந்த மாநகராட்சியையும் வெல்லாத பாஜகவின் NDA இந்த முறை திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
- கேரளாவில் ஆளும் இடதுமுன்னணிக்கு எதிராக- முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அதிருப்தி அலை வீசுவது உறுதியாகி உள்ளது.
- 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சூரில் வென்ற பாஜக இம்முறை மாநகராட்சி தேர்தலில் வெல்ல முடியவில்லை
- கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பாஜக புதிய சரித்திரத்தை எழுதியுள்ளது; இது காங்கிரஸின் சர்ச்சை எம்.பி.யான சசி தரூர் வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதி.
- கேரளாவில் பாஜகவுக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என தொடர்ந்து பேசப்பட்டாலும் தேர்தல் முடிவுகளானது கிறிஸ்தவர்கள்- முஸ்லிம்கள் எப்போதும் போல காங்கிரஸை முழுமையாக ஆதரித்துள்ளனர் என்பது உறுதியாகி இருக்கிறது.
- சபரிமலையில் தங்க கட்டிகள் முறைகேடு பிரச்சனை வெடித்துள்ள நிலையிலும் கூட பந்தளம் நகராட்சியை பாஜகவால் தக்க வைக்க முடியவில்லை. பந்தளம் நகராட்சியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையும் கிடைக்கவில்லை.
–
