கேரளா குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான டொமினிக் மார்ட்டினை நவம்பர் 15-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (நவம்பர் 6) அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமச்சேரி பகுதியில் கிறிஸ்துவ ஜெபக்கூடத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த மார்ட்டின் தாமாக முன்வந்து கொடைகாரா காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் எர்ணாக்குளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மார்ட்டினை இன்று ஆஜர்படுத்தினர்.
அப்போது, குண்டு வெடிப்பில் சர்வதேச அளவில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? மார்ட்டினுக்கு குண்டு வெடிப்பு பொருட்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி வேண்டும். சாட்சியங்களை சேகரிக்க மார்ட்டினை சில இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளதால் நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று என்.ஐ.ஏ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மார்ட்டினுக்கு நவம்பர் 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் உத்தரவு பிறப்பித்தார். மேலும் மார்ட்டின் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது எந்த நேரத்திலும் வழக்கறிஞர் சேவையை பெறலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
”சூர்யாவுடன் என்ன பிரச்சனை?”: அமீரிடம் நேரடியாக கேட்ட வெற்றிமாறன்
பாஜக தலையீடு… ஸ்டாலின் உரை புறக்கணிப்பு?: இலங்கை அரசு விளக்கம்!