செந்தில் பாலாஜி சகோதரர் தொடர்புடைய 10 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே 26 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளை தொடர்ந்து நேற்று (ஜூலை 11) 3வது முறையாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி சகோதரர் வீடு மற்றும் கரூர் சின்ன ஆண்டாங்கோயில் சாலையில் உள்ள ராமவிலாஸ் வீவிங் பேக்டரி, கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ் உணவகம், கொங்கு மெஸ் உணவகம், குறிஞ்சி பைனான்ஸ், கேப்பிடல் பைனான்ஸ், சேலம் சாலையில் உள்ள பாலவிநாயகா கிரஷர் அலுவலகம், மாயனூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் பண்ணை வீடு, கரூர் 80 அடி சாலையில் உள்ள அவரது அலுவலகம், வால்காட்டுபுதூரில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி பண்ணை வீடு ஆகிய 10 இடங்களில்15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஏற்கனவே நடைபெற்ற சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட இடங்களிலும் சீல் அகற்றப்பட்டு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த மே 26 ஆம் தேதி நடைபெற்ற சோதனையின் போது திமுகவினர் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் தூப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கரூரில் நேற்று நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. எனினும் இதுவரை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.
மோனிஷா