ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை விசாரிக்க 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 30) உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி மதியம் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சரித்திர குற்றவாளி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வருகிறது.
பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை கூறிய குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்களுடன் சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் இன்று அழைத்து வந்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் வேனில் இருந்து இறங்கிய கருக்கா வினோத் கையை உயர்த்தி, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும்” என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவரை அங்கிருந்து அழைத்து சென்று, பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத்தின் பின்புலத்தில் இருப்பது யார்? அவருக்கான அரசியல் தொடர்பு என்ன என்பது குறித்து விசாரிக்க 3 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் அனுமதி கேட்டனர்.
இதனையடுத்து கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கேரளா குண்டுவெடிப்பு: மார்ட்டின் அளித்த கூடுதல் வாக்குமூலத்தால் பரபரப்பு!