“கூட்டணிகள் என்றால் பல கட்சிகள் இருக்கும்; பல கருத்து வேறுபாடுகள் இருக்கும்.. இதெல்லாம் சகஜம்தான்” என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சர்ச்சை கருத்துகளை பேசி வருகிறார். இதற்கு திமுக அதிருப்தி தெரிவித்துள்ளது. மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் டெல்லி மேலிடத்துக்கு புகார் அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: கூட்டணின்னு இருந்தா பல கட்சிகள் இருக்கும், அதுல சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வர்றது சகஜம்தான். ஆனா அதுக்காக அதையே ஒரு பெரிய பிரச்சனையா மாத்தி கூட்டணியை உடைக்க முடியாது. நாங்க ரொம்ப காலமா இந்த கூட்டணியில இருக்கோம். அங்கங்க லோக்கல் லெவல்ல ஏதாவது கருத்து மோதல்கள் இருக்கலாம், அதை பெருசா எடுத்துக்கக் கூடாது. எல்லாருமே ஒரு பொதுவான நோக்கத்தோடதான் ஒண்ணா இருக்கோம்.
இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவுல நாங்க தலைமை தாங்குறோம், தமிழகத்துல திமுக தலைமை தாங்குது. நாங்க ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கி, சீரியஸா இருக்கிறவங்க லிஸ்ட் வச்சிருக்கோம். திமுகவோட பேச்சுவார்த்தை முடிஞ்ச பிறகு, எந்தெந்த தொகுதி காங்கிரஸ் நிக்கப்போகுதுன்னு முடிவாகும், அதுக்கப்புறம் தான் வேட்பாளர் பட்டியல் வரும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
