கர்நாடகா மாநிலம் பெலகாவி அருகே முஸ்லிம் தலைமை ஆசிரியரை வெளியேற்றுவதற்காக பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் விஷம் கலந்ததாக ஶ்ரீராம் சேனா என்ற இந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா, ஹூலிகட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக முஸ்லிம் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவரை அந்த பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், ஶ்ரீராம் சேனா என்ற இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஷம் கலந்த குடிநீரை குடித்ததால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இந்த கொடூரத்துக்கு ஶ்ரீராம் சேனாவின் தலைவர் முத்தாலிக் பொறுப்பேற்பாரா? கர்நாடகா பாஜக தலைவர்கள் பொறுப்பேற்பார்களா? அனைத்து வகையான தீவிரவாதமும் அச்சுறுத்தல்தான். பள்ளி குழந்தைகளை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களை விரைந்து கைது செய்த போலீசாருக்கு பாராட்டுகள் என கூறியுள்ளார்.

பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தது எப்படி?
ஶ்ரீராம் சேனாவின் தாலுகா தலைவரான சாகர்தான் இந்த சம்பவத்தில் முதன்மை குற்றவாளி. சாகரின் நண்பரான கிருஷ்ணா மாதர், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் விஷம் கலந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்து அனுப்பி இருக்கிறார். இருவரும் சொல்லிக் கொடுத்தபடி, அந்த மாணவர் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த குடிநீரை கலந்துள்ளார். இந்த விஷம் கலந்த குடிநீரை குடித்ததால் மொத்தம் 12 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
