கர்நாடகாவில் இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி அறிவித்த ஐந்து முக்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் இன்று பதவியேற்று கொண்டனர். இதனை தொடர்ந்து கர்நாடகா சட்டமன்றத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “காங்கிரஸ் கட்சி அறிவித்த ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகளும் இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம்.
முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் மே 22-ஆம் தேதி நடைபெறும். முந்தைய பாஜக ஆட்சி பயனற்றதாக இருந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கான வரிப்பங்கை அவர்களால் சரியாக பெற முடியவில்லை. நிதி ஆயோக் பரிந்துரையின்படி மத்திய அரசு கர்நாடகாவிற்கு ரூ.5495 கோடி வழங்க வேண்டும். முந்தைய பாஜக அரசு அதனை பெறவில்லை. நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து தான் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அவராலும் பிரதமர் மோடியாலும் தான் கர்நாடகா நஷ்டம் அடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தபோது அறிவிக்கப்பட்ட 165 தேர்தல் வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.2000, 200 யூனிட் இலவச மின்சாரம், அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை காங்கிரஸ் அறிவித்த முக்கிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளாகும்.
செல்வம்
சிஎஸ்கே வீரர்களை சூழ்ந்த ரசிகர்கள்:வைரல் வீடியோ!
