தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று (ஜூன் 24) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானிய கோரிக்கையின் போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது சென்னையில் ரூ.50 லட்சம் செலவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தநிலையில், இந்திராவுக்கு சிலை எடுக்க முயற்சித்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு சரிந்து போனதாகவும் சிலையை சுற்றி சர்ச்சைகளும் சென்டிமென்டுகளும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலா வருவதாக பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் இன்று (ஜூன் 25) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழக சட்டமன்றத்தில் 24-ந்தேதி செய்தித்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சாமிநாதன், சென்னையில் 50 லட்சம் ரூபாய் செலவில் இந்திரா காந்திக்கு சிலை அமைக்கப்படும் என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பதாகத் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் இதில் மகிழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், இந்தியாவில் எமெர்ஜென்சியை இந்திராகாந்தி பிரகடனப்படுத்திய நாள் ஜூன் – 25. அந்த நெருக்கடிநிலை காலத்தில் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது திமுக தான்.
அப்படியிருக்கும் நிலையில், அந்த இந்திரா காந்திக்கு திமுக அரசின் சார்பில் சிலையா? என்று திமுகவினர் மனதில் எதிரொலிக்கிறது. அதேபோல, இந்திராவின் எமெர்ஜென்சியை நினைவுப்படுத்துவதற்காகத் தான் அவருக்கு சிலை அமைக்கும் அறிவிப்பை ஜூன் 24-ந்தேதி திமுக அரசு அறிவித்திருக்கிறதா? என்று உணர்வுள்ள காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்பு கின்றனர்.
இதெல்லாம் ஒருபுறமிருந்தாலும், இந்திராகாந்தி சிலையை சுற்றி சர்ச்சைகளும் சென்டிமென்டுகளும் சூழ்ந்திருப்பது திமுக தலைமைக்குத் தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை.
அகில இந்திய அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஏசைய்யா என்பவர், இந்திரா காந்திக்கு சென்னையில் சிலை வைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் 1986-ல் அனுமதி கோருகிறார். அனுமதி மறுக்கப்படுகிறது.
இதனை எதிர்த்து, அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு, இந்திரா காந்தி சிலை அமைக்க அனுமதி பெறுகிறார் ஏசைய்யா.
அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்திற்கு சிலை வைக்க அனுமதி கிடைக்கிறது. சிலை அமைக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. இந்திராகாந்திக்கு சிலை அமைக்கும் முயற்சிகள் எப்போது தொடங்கியதோ, அப்போதிலிருந்தே, தேசிய அரசியலில் ஏறுமுகமாக இருந்த அமிதாப்பின் அரசியல் வாழ்க்கை இறங்கு முகமானது. தொடர் சரிவுகளை சந்தித்தார் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். படிப்படியாக அரசியலில் இருந்து அவர் விலகவும் நேர்ந்தது. சிலை அமைக்கும் முயற்சிகளும் முறிந்தது.
இதன்பிறகு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தியை சந்தித்து, இந்திரா காந்திக்கு சிலை அமைப்பது குறித்து விவாதித்தார் ஏசைய்யா. அப்போது, அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில் பெறப்பட்ட அனுமதியை, தமிழக காங்கிரஸ் கமிட்டி பெயருக்கு மாற்றி உத்தரவினை உயர்நீதிமன்றத்தில் பெற்றுக்கொடுக்க ஏசைய்யாவிடம் கேட்டுக்கொண்டார் வாழப்பாடி ராமமூர்த்தி.
அதன்படி, அனுமதி மாற்றி பெறப்பட்டு அதனை வாழப்பாடியிடம் கொடுத்தார் ஏசைய்யா. சிலை அமைக்கும் முயற்சியை வாழப்பாடி எடுத்த மூன்றாவது நாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அவருக்குப் பறிபோனது.
இருந்தாலும் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்திரா சிலை குறித்த விசயத்தை வாழப்பாடி ராமமூர்த்தி கொண்டு சென்றபோது, இந்திராவுக்கு சிலை வேண்டாம், ராஜீவ் காந்திக்கு சிலை வைக்கலாம் என்று புதிய யோசனை சொன்னார் ஜெயலலிதா.
அதாவது, 1991-ல் தேர்தலுக்கு முன்பு, ராஜீவ்காந்தி கடைசியாக மாலை அணிவித்தது ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் இந்திராகாந்தி சிலைக்குத்தான். சென்டிமென்டாக இது சரியில்லை என ஜெயலலிதாவுக்கு அப்போது சொல்லப்பட்டிருந்ததால் அதை மனதில் வைத்துக்கொண்டு தான் இந்திராவுக்கு சிலை வேண்டாம் என வாழப்பாடியிடம் ஜெயலலிதா சொன்னதன் ரகசியம்.
அதையடுத்து, இந்திராகாந்தியை கைவிட்டுவிட்டு, சென்னையில் சைதாப் பேட்டை சின்னமலையில் ராஜிவ்காந்திக்கு சிலை அமைக்கப்பட்டது. வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில், ஜெயலலிதாவின் முன்னிலையில் ராஜிவ்காந்தி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரசிம்மராவ்.
இந்த நிலையில், திமுக – த.மா.கா. கூட்டணி 1996-ல் அமோக வெற்றி பெற்றது. த.மா.கா. தலைவர் மூப்பனாரை சந்தித்து, இந்திரா காந்தி சிலை அமைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டிப் பேசினார் ஏசைய்யா.
இந்திரா மீது பற்றுதல் கொண்ட மூப்பனார், சிலை அமைக்கவும் அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். உடனே., சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பில் சிலை அமையும் இடத்தைப் பார்வையிட்டார். மேலும், புகழ்பெற்ற சிற்பி மணிநாகப்பாவிடம் சிலை வடிவமைக்கும் பணிகளை துவக்குமாறு அறிவுறுத்தியதுடன் முன் பணமாக 3 லட்ச ரூபாயையும் கொடுத்தார் மூப்பனார். சிலை அமைக்கும் பணி துவங்கியதுமே மூப்பனார் பல பிரச்சனைகளை சந்தித்தார். மறைந்தும் போனார். இந்திராவுக்கு சிலை அமைக்கும் பணியும் துவக்கத்திலேயே முற்றுபெற்றது. ஏசைய்யாவும் இறந்து போனார்.
ஆக, இந்திராகாந்திக்கு சிலை அமைக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இப்படி இந்திராவுக்கு சிலை எடுக்க முயற்சித்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு சரிந்து போனதாக, சிலையை சுற்றி சர்ச்சைகளும் சென்டிமென்டுகளும் அப்போதே உலா வந்தன.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நீண்டகால மூத்த அரசியல் தலைவர்கள் பலருக்கும் இந்த சென்டிமென்ட் விவகாரம் தெரியும். இந்த விவகாரமெல்லாம் தெரிந்துதான் பெரியாரின் பேரன் என்று வர்ணிக்கப்படுகிற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இந்திராவுக்கு சிலை அமைக்க முயற்சி எடுத்ததே இல்லை. இப்படிப்பட்ட சூழலில், தற்போது இந்திராவுக்கு சிலை அமைக்கப்படும் என்று திமுக அரசு, சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்கிறார்.
புரட்சி பாரதம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி என பல்வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டு காங்கிரசில் தஞ்சமடைந்து, தலைவராகவும் வந்துவிட்ட செல்வப்பெருந்தகைக்கு இந்த வரலாறு தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரியாமல் போகலாம். தெரிந்திருக்கவும் நியாயமில்லை.
ஆனால், தமிழகம் பெரியார் மண் என சொல்லும் திராவிட இயக்கத்தினருக்கும், பெரியாரின் பேரன் என சொல்லிக்கொள்ளும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும் இந்த சர்ச்சைகளும் சென்டிமென்டும் நன்றாகவே தெரியும்.
அப்படியிருக்கும்பட்சத்தில் இந்திரா காந்திக்கு சிலை அறிவிப்பை எப்படி திமுக அரசு அறிவித்தது? என்று தெரியவில்லை. இந்த சென்டிமென்ட் விவகாரத்தை அறிந்துள்ள, திமுகவுக்கு நெருக்கமான காங்கிரசை சேர்ந்த பீட்டர் அல்ஃபோன்ஸ், கோபண்ணா போன்றோர் இதனை திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்வார்களா?
இதுவரை தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்த யாரும் சத்யமூர்த்தி பவனில் குறைந்தபட்சம் ஒரு மார்பளவிற்கு கூட இந்திராகாந்தி சிலையை ஏன் அமைக்கவில்லை? மேலும், அமைச்சர் சாமிநாதனும், செல்வப்பெருந்தகையும் சிலை அமையும் அண்ணா சாலை ஸ்பென்சர் பகுதியை பார்வையிட்டு அதன் புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேளச்சேரி, கோயம்பேட்டில் எஸ்கலேட்டருடன் நடை மேம்பாலம் : அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!
வாழ்க தமிழ்நாடு, பெரியார்… முருகப்பெருமான் மீது ஆணை… தமிழ்நாடு எம்.பிக்கள் பதவியேற்பு!