ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிரான வழக்கில் நாட்டின் வரலாற்றில் ஒரு மாநிலம் என்றுமே யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதிட்டுள்ளார்.
கடந்த 1947ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளி விவகாரங்களை தவிர மற்ற எல்லா துறைகளிலும் தனி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியில் அமர்ந்த பாஜக அரசு, ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நாடாளுமன்றத்தின் மூலம் ரத்து செய்தது.
இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக அமைந்த லடாக் தற்போது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அதே வேளையில் ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்தபோதிலும், கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
இதற்கு காரணமாக பார்க்கப்படும் சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (ஆகஸ்ட் 2) தனது விசாரணையை தொடங்கியது.
அப்போது, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க 60 மணி நேரம் வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் கோபால் சுப்பிரமணியம் ஆகியோர், தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க 10 மணி நேரம் கேட்டனர்.
மத்திய அரசின் சார்பாக தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளை எடுத்துக்கொண்டதால் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
இந்த 5 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி கிடையாது. அம்மாநிலத்தில் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்துவதற்கு முன் அம்மாநில சட்டமன்றம் முடக்கப்பட்டது. இதற்கான அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றலாம், சிறிய மாநிலங்களை உருவாக்க பெரிய மாநிலத்தின் எல்லைகளை பிரிக்கலாம். ஆனால் இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு மாநிலம் என்றுமே, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதில்லை.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்க்கும் அதேவேளையில், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதிலும், அது எப்போதும் அவ்வாறே இருக்கும் என்பதிலும் மனுதாரர் உறுதியாக உள்ளார்” என்றார்.
தொடர்ந்து அவர், ”சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்த இந்த வழக்கில், இந்திய அரசியல் சாசனம், இந்திய அரசியல் சாசனம் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தக்கூடிய விவகாரம், ஜம்மு காஷ்மீருக்கான அரசியல் சாசனம், சட்டப்பிரிவு 370 உள்ளிட்ட 4 சட்ட அம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்திய அரசியல் சட்டங்கள் அனைத்துமே ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தக்கூடிய வகையில் காலப்போக்கில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
அரசியல் நிர்ணய சபைதான் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வந்தது. 2019ஆம் ஆண்டு வரை அதன் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதற்கு ஏற்ப அரசியல் சாசன சபை தொடரும் என்ற புரிதல்தான் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே இருந்தது. ஆனால், சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு முன் அரசியல் சாசன சபையின் பரிந்துரையை ஏன் மத்திய அரசு பெறவில்லை?” என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”அரசியல் நிர்ணய சபை ஒரு நிரந்தர அமைப்பு அல்ல. அது ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்டது . அந்த நோக்கம் நிறைவேறிய பிறகு அரசியல் நிர்ணய சபை செயல்பாடு நிறுத்தப்படலாமே?” என்று கேள்வி எழுப்பினர்.
தலைமை நீதிபதி சந்திரசூட், ”ஜம்மு காஷ்மீருக்கு எந்தெந்த விதிகள் பொருந்தும் என்பதை வரையறுப்பதில் குடியரசுத் தலைவர் அதிகாரம் மீறப்படவில்லை தானே?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கபில் சிபல், ”ஜம்மு காஷ்மீர் மக்களைத் தள்ளிவிட்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளது. அம்மாநில மக்களின் விவகாரத்தில் அவர்களின் விருப்பம் மற்றும் ஆசைகள் என்றும் மதிக்கப்பட வேண்டும்” என்றார்.
அப்போது நீதிபதி கவுல், ”தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ய விரும்பினாலும், அது சாத்தியமில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா?” என்று கேட்க, அதற்கு, “இல்லை, முடியாது” என்று அழுத்தமாக சிபல் பதிலளித்தார்.
தொடர்ந்து இன்று நடைபெற உள்ள வழக்கு விசாரணையிலும் கபில் சிபல் தனது வாதத்தை தொடர உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை – மதுரை தேஜஸ்: மறு அறிவிப்பு வரும்வரை தாம்பரத்தில் நிற்கும்!
பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.20,000 அபராதம்!
Comments are closed.