கண்ணாடி பாலத்தில் விரிசல் விழுந்தது எப்படி? சுற்றுலா பயணிகள் நடக்கலாமா? : அமைச்சர் வேலு பேட்டி!

Published On:

| By Kavi

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தில் உள்ள ஒரு கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். ஆனால் விரிசல் ஏற்பட்டவுடன் அந்த கண்ணாடிக்கு பதிலாக மாற்றுக்கண்ணாடி பொறுத்தப்பட்டது.

இந்தநிலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கண்ணாடி இழை பாலத்தில் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

ADVERTISEMENT

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (செப்டம்பர் 10) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “கடந்த டிசம்பர் 30ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பாலத்தை திறந்து வைத்தார். 77மீ கொண்ட அந்த பாலத்தின் மையப்பகுதியில் 65 மீட்டர் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து கூட வந்து அந்த பாலத்தை கண்டு ரசித்தார்கள். லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். 37 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கான ஒப்பந்தத்தில், பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர்கள் 10 ஆண்டுகள் அவர்களே பராமரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

கடலுக்கு நடுவே கட்டப்பட்டுள்ளதால் உப்பு காற்று, காற்றின் வேகம், கடல் சீற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பராமரிக்கப்படுகிறது.

அந்த ஒப்பந்ததாரர் அங்கேயே இருந்து வருகிறார். இந்தநிலையில் இரண்டு பகுதிகளை இணைக்கும் பாலத்தின் மேலே இருக்கும் தூணில் போல்டு நட்டை எல்லாம் சரிபார்க்க வேண்டுமென்ற அடிப்படையில், ஒப்பந்ததாரர் மேலே ஏறி செக் செய்த போது ஒரு சுத்தியல் கீழே விழுந்தது.

அப்போதுதான் சிறு கீறல் ஏற்பட்டது. கண்ணாடி உடையவில்லை. எனவே அந்த கண்ணாடி பகுதியை மட்டும் பிளாக் செய்தோம். எனினும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பாலத்துக்கு என்ன பாதிப்பு வந்தாலும், இந்த 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்ததரார்தான் செலவு செய்ய வேண்டும். அந்த கண்ணாடி 2 மீட்டர் நீளமும், 2.40 மீ அகலமும், 55மிமீ தடிமனும் கொண்டது. இது 2500 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டது. 35 பேர் நிற்கலாம்.

இவ்வளவு பேர் நின்றால் கூட எதுவும் ஆகாது. அந்தளவுக்கு தரமாக இருக்கிறது. இதை rainforce glass என்று சொல்வார்கள். Saint Gobain என்ற நிறுவனம் தான் இந்த கண்ணாடியை சப்ளை செய்தது.

கண்ணாடியில் கீறல் விழுந்ததும், ஒப்பந்ததாரர் கோட்ட பொறியாளருக்கு தகவல் தெரிவித்தார். அந்த நிறுவனத்துக்கும் தொடர்பு கொண்டு, கண்ணாடி வேண்டும் என்று கேட்டனர்.

அந்த நிறுவனமும் உடனே அனுப்பி வைத்துவிட்டது. 8/9/2025 அன்று இரவே கம்ப்ரஸர் இயந்திரத்தை பயன்படுத்தி புதிய கண்ணாடியை பொறுத்திவிட்டோம்.

எனவே சுற்றுலா பயணிகளுக்கு எந்த விதமான அச்சமும், பயமும் தேவையில்லை. பாலம் கட்டும் போது எப்படி உறுதித் தன்மை இருந்ததோ, அப்படிதான் இன்றும் உள்ளது. ஒரே நேரத்தில் 650 பேர் அந்த பாலத்தில் பயணிக்கலாம்.

இப்போது நாளொன்றுக்கு 8000 பேர் இந்த பாலத்தை கடக்கிறார்கள்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share