குலதெய்வ வழிபாட்டு முறையைப் போற்றுகிற வகையில் சுமார் 16 கோடி ரூபாயில் உருவான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகம் முழுக்கச் சுமார் 400 கோடி ரூபாய் வசூல் செய்தது.

அதன் அடுத்த பாகமாக வந்திருக்கும் ‘காந்தாரா சேஃப்டர் 1’ தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக வலம் வருகிறது. இப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுக்கச் சுமார் 200 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

’காந்தாரா சேஃப்டர் 1 திரைப்படம் மீண்டும் கன்னடப் படவுலகின் பெருமையை அனைவருக்கும் உணர்த்தும்விதமாக உள்ளது’ என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார் ‘கேஜிஎஃப்’ பட நட்சத்திரமான யஷ். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், இப்படம் இன்று (அக்டோபர் 5) டெல்லியிலுள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் திரையிடப்படுகிறது.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உடன் இப்படத்தின் நடிகரும் இயக்குனருமான் ரிஷப் ஷெட்டி, நாயகி ருக்மிணி வசந்த், தயாரிப்பாளர் சலுவே கௌடா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.
