ஒரு திரைப்படத்தின் வெற்றி எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதைவிடப் பன்மடங்காக இருக்கும். ஏனென்றால், முதல் பாகம் எவ்விதச் சத்தமும் இன்றி வெளியாகியிருக்கும். அதற்கான சமீபகால உதாரணமாகியிருக்கிறது 2022இல் வெளியான ‘காந்தாரா’.
மங்களூரு வட்டாரத்திலுள்ள பஞ்சுருளி எனும் நாட்டார் தெய்வம் பற்றிப் பேசிய இப்படமானது கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழி பேசும் மக்களிடமும் வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள நாட்டார் தெய்வங்கள் குறித்த பெருமிதங்களை வெளிப்படுத்த இப்படம் துணை நின்றது.
அதுவே, அப்படத்தின் நாயகனும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி உடனடியாக ‘காந்தாரா: சேப்டர் 1’ எனும் ‘ப்ரிக்யூல்’லை தொடங்கக் காரணமாக இருந்தது.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவுற்றியிருக்கிறது. இதனை ஒரு வீடியோ வழியாக அப்படக்குழு அறிவித்திருக்கிறது. ஹொம்பாலே பிலிம்ஸ் இதனைத் தயாரித்திருக்கிறது.
இப்படத்திற்காக செட்கள் அமைக்கப்பட்ட விதம், அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்ட முறை, அதில் பங்கேற்றவர்களின் கடின உழைப்பைக் காட்டுவதாக இந்த வீடியோ அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற இந்த படப்பிடிப்பு 250 நாட்கள் நடந்ததாக, இதில் கூறப்பட்டுள்ளது. Kantara Chapter 1 Release Date
அத்தனையும் இயக்குனர் ரிஷப் ஷெட்டியின் பார்வையிலேயே இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது. கூடவே, படப்பிடிப்பின் இடையே நிகழ்ந்த விபத்துகள் குறித்த செய்திகளையும் லேசாகத் தொட்டுச் செல்கிறது இதன் உள்ளடக்கம்.
“எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நான் நம்புன தெய்வம் என்னைக் கைவிடலை” என்று இந்த வீடியோவில் சொல்லியிருக்கிற ரிஷப் ஷெட்டி, தனக்கு உறுதுணையாகத் தயாரிப்புத் தரப்பும் படக்குழுவும் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.
வரும் அக்டோபர் 2ஆம் தேதியன்று இப்படம் வெளியாவதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது இந்த வீடியோ. Kantara Chapter 1 Release Date
